உலக நாடுகளுக்கு நிம்மதி தரும் டிரம்பின் அதிரடி...! - ஈரான் உடனான போர் நிறுத்தம் நீட்டிப்பு...!
Trump action brings relief world Extension ceasefire Iran
அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றம் உச்சத்தை எட்டிய நிலையில், சுமார் 40 நாட்கள் நீண்ட மோதலுக்கு பின்னர் கடந்த 7-ந்தேதி இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த பலனை அளிக்காமல் தோல்வியில் முடிந்ததால், இருநாடுகளின் உறவில் மீண்டும் பதற்ற அலை எழுந்தது.

இதையடுத்து, ஈரானை மூலைக்குள் தள்ளும் முயற்சியாக ஹார்முஸ் நீரிணை மற்றும் முக்கிய துறைமுகங்களை அமெரிக்க போர்க்கப்பல்கள் சுற்றிவளைத்து கடுமையான அழுத்தத்தை உருவாக்கின. மேலும், ஈரான் நோக்கி பயணித்த சரக்கு கப்பல்களை தடுத்து நிறுத்திய அமெரிக்காவின் நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்தது; இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பை பதிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், தற்காலிக போர் நிறுத்தத்தை மேலும் ஒரு நாளுக்கு நீட்டிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, போர் நிறுத்த காலத்தை மேலும் நீட்டிக்கப்படும் எனவும், ஈரான் ஒருங்கிணைந்த அமைதித் திட்டத்தை முன்வைக்கும் வரை கால அவகாசம் வழங்கப்படும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால், தாக்குதல்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டாலும், ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த முடிவு சர்வதேச நாடுகளுக்கு தற்காலிக நிம்மதியை அளித்துள்ள நிலையில், போர் நிறுத்த நீட்டிப்பை வரவேற்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்துள்ளார்.
மற்றொரு பக்கம், அமெரிக்காவின் துறைமுக முற்றுகை நேரடி போர் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும் என்றும், வெளிப்புற அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என்பதை ஈரான் நன்கு அறிந்துள்ளது என்றும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Trump action brings relief world Extension ceasefire Iran