உயிருக்கு உத்தரவாதம் இல்லை; 'ஈரானில் உள்ள 10,000 இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்'; இந்திய தூதரகம் அறிவிப்பு..!
The Indian embassy has announced that the 10000 Indians in Iran should leave immediately
ஈரானில் பணவீக்கம் அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி மோசமாக உயர்வடைந்துள்ளது. இதனை சமாளிக்க முடியாத அந்நாட்டு மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுடுவதற்கு அந்நாட்டின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி காமேனி உத்தரவிட்டுள்ளார். பொருளாதாரச் சரிவு மற்றும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், வன்முறையாக வெடித்துள்ளதில், இதுவரை இரண்டாயிரத்து 571 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறார். தற்போது ஈரானில் நிலைமை மிக மோசமாகி வருகின்றது. ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் இருந்து வருகின்ற நிலையில், அவர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று இந்திய அரசின் தெஹ்ரான் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
அங்கு, மாணவர்கள், யாத்திரிகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட இந்தியர்கள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்தி ஈரானைவிட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளைத் இந்தியர்கள் தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், உள்ளூர் ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, தேவையான உதவிக்காக இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
The Indian embassy has announced that the 10000 Indians in Iran should leave immediately