சிறை அறையில் ‘தற்கொலை’… ஆனால் கழுத்தில் 3 முறிவு...! - எப்ஸ்டீன் மரணத்தில் புது திருப்பம்...!
Suicide prison cell but 3 fractures neck New twist Epstein death
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை ஏமாற்றி கடத்தி, பணக்காரர்களின் இன்ப தேவைகளுக்காக ‘பொருளாக’ விநியோகித்ததாக குற்றச்சாட்டுகளால் உலகையே அதிரவைத்த அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். தனது செயல்பாடுகளுக்கென தனியே ஒரு தனிமை தீவையே வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.கடந்த 2019 ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட அவர், நியூயார்க் நகரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி, தனது சிறை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.மேலும், நகரின் முதன்மை மருத்துவ ஆய்வாளர் அலுவலகமும் இதை ‘தற்கொலை’ என உறுதி செய்தது.ஆனால் இந்த விளக்கம் ஆரம்பத்திலிருந்தே பல சந்தேகங்களை கிளப்பியது.
எப்ஸ்டீன் தனது வாடிக்கையாளர்கள் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், ஆவணங்கள் என பல ஆதாரங்களை சேகரித்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவை அனைத்தும் பின்னர் “எப்ஸ்டீன் கோப்புகள்” என்ற பெயரில் பேசப்பட்டன.
நீதிமன்ற உத்தரவின் பேரில், லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் கட்டம் கட்டமாக வெளியிடப்பட்டு வருகின்றன.அண்மையில, அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட கோப்புகளில், டொனால்டு டிரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், பிரின்ஸ் ஆண்ட்ரு, அனில் அம்பானி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
இதனால், “எப்ஸ்டீன் உண்மையிலேயே தற்கொலை செய்தாரா? அல்லது சக்திவாய்ந்தவர்களை பாதுகாக்க திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டாரா?” என்ற கேள்வி மீண்டும் தீவிரமாக எழத் தொடங்கியது.
இந்நிலையில், அவரது பிரேதப் பரிசோதனையில் பார்வையாளராக இருந்த மருத்துவர் மைக்கேல் பேடன், தி டெலிகிராப் இதழுக்கு அளித்த பேட்டியில் அதிர்ச்சிகரமான கருத்துகளை வெளியிட்டார்.
“இது சாதாரண தூக்கிட்டு தற்கொலை போல் தெரியவில்லை; யாரோ ஒருவர் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கலாம்” என அவர் சந்தேகம் தெரிவித்தார்.எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு இருந்ததாகவும், தனது 50 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்களிடம் இப்படியான மூன்று முறிவுகள் அரிது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன் நேரடியாகப் பரிசோதனை பார்க்காமலேயே தற்கொலை என அறிவித்ததாகவும் குற்றம்சாட்டினார்.2023ஆம் ஆண்டு வெளியான நீதித்துறை அறிக்கையிலும், அவர் இருந்த சிறையில் பாதுகாப்பு குறைபாடுகள் பல இருந்தது, வழக்கமான கண்காணிப்புகள் கூட செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனால் சந்தேகங்கள் மேலும் வலுத்தன.எப்ஸ்டீனின் வழக்கறிஞர்களும், அதிகாரப்பூர்வ பிரேதப் பரிசோதனை அறிக்கையில் நம்பிக்கை இல்லை என தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகின்றனர். உண்மை என்ன என்பது இன்னும் புதிராகவே நீடிக்கிறது.
English Summary
Suicide prison cell but 3 fractures neck New twist Epstein death