மின்வெட்டு, போக்குவரத்து முடக்கம்…! 13 ஆயிரம் விமானங்கள் ரத்து! - பனிப்புயலால் அமெரிக்கா உறைநிலை
Power outages transportation disruptions 13000 flights cancelled America frozen by snowstorm
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு தொடரும் நிலையில், இன்றும் நாளையும் வலிமையான பனிப்புயல் தாக்கும் என அதிகாரிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை கடுமையாக தாக்கும் இந்தப் புயல், நியூ மெக்சிகோவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களையும் தாக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் முழு வேகத்தில் தாக்கத் தொடங்கியுள்ளது. பல மாநிலங்களில் கடும் பனிச்சரிவு மற்றும் வலிமையான காற்று வீசி, இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் மாபெரும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களில் பனி உறைந்து கிளைகள் முறிந்து விழுந்ததால் மின்கம்பிகள் துண்டிக்கப்பட்டு, லூசியானா, டெக்சாஸ் போன்ற மாநிலங்கள் கடும் இருளில் மூழ்கியுள்ளன.
போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. இந்த பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை பெரும்பாலான பகுதிகள் குளிர்காலப் புயல் எச்சரிக்கை வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
பனிப்புயல் தாக்குதலால் அமெரிக்கா முழுவதும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஓக்லஹோமா நகரின் வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலையம் அதிக அளவில் விமான ரத்து காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த கொடிய பனிப்புயல் அமெரிக்காவை முழுமையாக முடக்கி வைத்துள்ளது. மக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவும் அதிகாரிகள் கடும் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
English Summary
Power outages transportation disruptions 13000 flights cancelled America frozen by snowstorm