பயங்கரவாதிகளுக்கு மரண அடி கொடுத்த பாகிஸ்தான் படை...! எல்லையில் புகுந்து முக்கிய தளபதியை தீர்த்துக்கட்டிய அதிரடி...!
Pakistani army dealt mortal blow terrorists action entering border and eliminating key commander
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. கராச்சியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நடத்திய மாபெரும் தாக்குதலில் 29 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.பாகிஸ்தானின் கராச்சியில் அமைந்துள்ள சிந்து ரேஞ்சர்ஸ் துணை ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நேற்று முன்தினம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.
சக்திவாய்ந்த வெடிகுண்டுகளுடன் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த தாக்குதலுக்கு தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பின் கிளை பிரிவான ஜமாத்-உல்-அஹ்ரார் பொறுப்பேற்றது. தாக்குதலுக்குப் பின்னர் பழிவாங்கும் நடவடிக்கையாக 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் முன்பே அறிவித்திருந்தது.

இந்த சூழலில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதிகளில் தரை மற்றும் வான்வழி இணைந்த அதிரடி தாக்குதலை முன்னெடுத்தது.இதுகுறித்து பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் அதாவுல்லா தாரார் தெரிவிக்கையில், உளவுத்துறையின் துல்லிய தகவல்களின் அடிப்படையில் பஜௌர் மாவட்டத்தில் முக்கிய மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறினார்.
இந்த தரைவழி தாக்குதலில் மிகவும் தேடப்பட்ட தளபதி கான் பரோஷ் உட்பட 3 முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பக்தியா, பக்திகா மற்றும் குனார் பகுதிகளில் மறைந்திருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த அதிரடி தாக்குதலில் மேலும் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன், பெருமளவிலான ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்து சேமிப்பு மையங்கள் மற்றும் மறைவிடங்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது நாட்டுக்குள் தொடர் தாக்குதல்களை நடத்தும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் தலிபான் அரசு மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் வழங்கி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.இந்த புதிய தாக்குதல், ஏற்கனவே பதற்றமாக இருந்த இரு நாடுகளின் உறவை மேலும் மோசமாக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இருநாடுகளுக்கும் இடையே வெடித்த கடுமையான மோதல், சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது.பின்னர் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் சமாதான பேச்சுவார்த்தையால் நிலைமை கட்டுக்குள் வந்தது.
ஆனால் தற்போது மீண்டும் வெடித்துள்ள ராணுவ மோதல், எல்லைப்பகுதியில் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதுடன், புதிய போர் சூழலுக்கான எச்சரிக்கையையும் எழுப்பியுள்ளது.
English Summary
Pakistani army dealt mortal blow terrorists action entering border and eliminating key commander