ஹோர்முஸ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கும் ஈரான்..!
Iran to reopen the Strait of Hormuz for shipping traffic
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் ஏற்பட்டதை தொடர்ந்து, எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரானிய வெளியுறவு அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது;
''லெபனான் போர் நிறுத்தத்திற்கு இணங்க, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து வணிகக் கப்பல்களும் தடையின்றிப் பயணிக்கலாம். ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறைகள் ஏற்கனவே அறிவித்த ஒருங்கிணைந்த வழித்தடத்தின்படி இந்தப் போக்குவரத்து அமையும்," என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரான்- அமெரிக்க இடையேயான பேச்சுவார்த்தையில் லெபனானையும் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேலும் லெபனானும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது.
இந்த அமைதி முயற்சியின் அடுத்த கட்டமாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழைத்துள்ளார். இது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, தூதரக ரீதியிலான நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான வாய்ப்பாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், சர்வதேச சந்தையில் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கும் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
English Summary
Iran to reopen the Strait of Hormuz for shipping traffic