'பொதுமக்கள் மீது கை வைத்தால் விளைவு தீவிரமாக இருக்கும்'...! - திமுகவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பகிரங்க எச்சரிக்கை...!
If you lay hands on public consequences will be serious Minister Rajmohan public warning DMK
தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை காவலர்கள் கைது செய்தனர். பின்னர், வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைக்காக அவரை தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றனர்.உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல், கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் முழக்கப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், முக்கிய சாலைகளில் பரபரப்பான சூழல் உருவானது.சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லம் முன்பும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தி கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் கைது மற்றும் அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றதாகவும், சில பகுதிகளில் போராட்டக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில இடங்களில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்களும் அரசியல் விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளன.இந்தச் சூழலில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவின் மூலம் தி.மு.க.வினரின் போராட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவரது பதிவில், "பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாலை மறியலால் ஏற்பட்ட சிரமத்தை சுட்டிக்காட்டிய இருசக்கர வாகன ஓட்டுநர் ஒருவரை தி.மு.க.வினர் கூட்டாக தாக்கியதாக வெளியாகியுள்ள காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "தொடர்ச்சியாக பெண்களை தரக்குறைவாக விமர்சித்து வந்தவர்கள், தற்போது வன்முறையையும் கையில் எடுத்திருப்பது கவலைக்குரியது. பேச்சில் நாகரிகம் இல்லாமையும், செயல்பாட்டில் வன்முறையும் ஜனநாயக அரசியலுக்கு ஏற்றதல்ல. இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள், பெண்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, "சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயல்களில் யார் ஈடுபட்டாலும், சட்டம் தனது கடமையை தவறாமல் நிறைவேற்றும். பொதுமக்களின் பாதுகாப்பும், சட்டம்-ஒழுங்கும் எந்தச் சூழலிலும் உறுதிப்படுத்தப்படும்" என்று அமைச்சர் ராஜ்மோகன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
If you lay hands on public consequences will be serious Minister Rajmohan public warning DMK