காசாவுக்கு நிவாரண பொருட்களுடன் சென்ற கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட குழுவினர் நாடு கடத்தல்..!
Greta Thunberg and other members of the group that went to Gaza with relief supplies were deported
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை காசாவில் மட்டும் 67,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் அமைதி பேச்சு வார்த்தை நடைபெறும் சூழலில் ஒரே நாளில் காசாவில் 63 பேர், இஸ்ரேல் தாக்குதலால் பலியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு உதவ, நிவாரணப் பொருட்களுடன் கப்பலில் சென்ற சமூக செயற்பாட்டாளர்கள் 171 பேரை இஸ்ரேல் நாடு கடத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி வாழ் மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களுடன் பார்சிலோனாவில் இருந்து 42 படகுகளில், சுமார் 500 செயற்பாட்டாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

நிவாரண பொருட்களுடன், குறித்த படகுகள், பாலஸ்தீன பிரதேசத்தை அடைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் இடைமறித்துள்ளனர். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் பயணித்த படகும் அடங்குகிறது. தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் இஸ்ரேலியப் படையினர் சிறைப்பிடித்து சென்றனர்.
இதில், பல ஆர்வலர்கள், இஸ்ரேல் படைகளால் தடுப்புக் காவலில் கொடுமை படுத்தப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள சம்வபம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேல் படையினர் கிரெட்டாவின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, அவரை அடித்துத் துன்புறத்தியதோடு இஸ்ரேலிய கொடியை முத்தமிடுமாறு வற்புறுத்தியதாக கூறப்பட்டது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் பொய்க் குற்றச்சாட்டு என்று திட்டவட்டமாக மறுத்துள்ள நிலையில், கிரெட்டா தன்பெர்க் உள்ளிட்ட 171 ஆர்வலர்கள் கிரீஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Greta Thunberg and other members of the group that went to Gaza with relief supplies were deported