40 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை விடுவிக்க ஜி7 நாடுகள் முடிவு; அவசரகால கையிருப்பிலிருந்து விடுவிக்க திட்டம்..!
G7 countries decide to release 400 million barrels of crude oil from emergency reserves
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில் இந்த போர் பதற்றங்களுக்கு இடையே கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்து மீண்டும் உயர்ந்துள்ளது.
அதாவது, உலக நாடுகளுக்கு தேவைப்படும் கச்சா எண்ணெய்யில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கிய வழித்தடத்தை ஈரான் மூடியுள்ளது.
இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை கடும் உயர்வை சந்தித்தது. நேற்று முன்தினம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 120 டாலர் என்ற உச்சத்தை தொட்ட நிலையில், நேற்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 11.3 சதவீதம் சரிந்து 87.80 டாலராக குறைந்தது.

இந்த நிலையில், சர்வதேச எரிசக்தி முகமை மற்றும் ஜி7 நாடுகளின் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா) எரிசக்தி அமைச்சர்கள் இணைந்து நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதன் படி, இந்த விலை சரிவு ஏற்பட்டுள்ளது.
சுமார் 120 கோடி பேரல் எண்ணெய் கையிருப்பு உள்ள நிலையில், சந்தையை நிலைப்படுத்த 30 கோடி முதல் 40 கோடி பேரல் வரையிலான எண்ணெய்யை அவசரகால கையிருப்பிலிருந்து விடுவிக்க அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த சூழலில், அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டாங்கர்களை பாதுகாப்புடன் அழைத்துச் செல்வதாக வெளியான தகவலால் கச்சா எண்ணையின் விலை மேலும் சரிந்தது.

ஆனால், அந்த தகவல் தவறானது என வெள்ளை மாளிகை பின்னர் விளக்கம் அளித்தது. இது தொடர்பாக சர்வதேச எரிசக்தி முகமையின் தலைவர் பாத்தி பிரோல் கூறுகையில்,
'சர்வதேச எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய ஜி7 நாடுகளுடன் இணைந்து அவசர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை நிலைப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், தற்போதைய நிலவரப்படி, ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 87.80 டாலராகவும், டபிள்யூ.டி.ஐ கச்சா எண்ணெய் 83.45 டாலராகவும் வர்த்தகம் ஆகிறது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து மூடப்பட்டிருந்தால் மீண்டும் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
English Summary
G7 countries decide to release 400 million barrels of crude oil from emergency reserves