ஈரோடு மார்க்கெட்டில் எளிமையாக வந்த ஜேசன் சஞ்சய்...! - தொழிலாளர்களுடன் செல்ஃபி ...வைரலாகும் புகைப்படங்கள்...!
Jason Sanjay Arrives Unassumingly Erode Market Selfies Workers Photos Go Viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறார்.
அவரது முதல் திரைப்படம் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. ஆக்ஷன் பின்னணியில் உருவாகும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதற்கிடையில், தனது அடுத்த திரைப்படத்திற்கான முன்னேற்பாடுகளையும் ஜேசன் சஞ்சய் தீவிரமாக தொடங்கியுள்ளார். அதன் ஒரு பகுதியாக, ஈரோடு அசோகபுரத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி ஜவுளி மற்றும் பனியன் மார்க்கெட்டுக்கு தனது படக்குழுவினருடன் முன்தினம் இரவு வந்தார்.
அங்கு மார்க்கெட்டின் இயல்பான சூழலை பதிவு செய்யும் வகையில் இரவு முழுவதும் படப்பிடிப்பு நடத்தி தேவையான காட்சிகளை படமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர் நேற்று காலை, மார்க்கெட்டில் பணிபுரியும் சுமைத் தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுடன் ஜேசன் சஞ்சய் சுதந்திரமாக கலந்துரையாடினார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொழிலாளர்கள் தங்களது செல்போன்களில் சஞ்சயுடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.
அதேபோல், சஞ்சயும் தொழிலாளர்களுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றன.
ஒரு பெரிய நடிகரின் மகனாக இருந்தும் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் சாதாரணமாக வந்து எங்களுடன் அன்பாக பேசியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக மார்க்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த பிறகு, ஜேசன் சஞ்சய் தனது குழுவினருடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
English Summary
Jason Sanjay Arrives Unassumingly Erode Market Selfies Workers Photos Go Viral