சிலியை உலுக்கிய பேரழிவு: காட்டுத்தீயில் 18 பேர் மரணம்...! -அவசரநிலை அமல்..!
Devastation rocks Chile 18 dead wildfires State emergency declared
தென் அமெரிக்காவின் அழகிய நாடுகளில் ஒன்றான சிலி தற்போது தீப்புயலின் பிடியில் சிக்கி தவிக்கிறது. காட்டுத்தீ கொடூரமாக பரவி, மனித உயிர்கள் முதல் இயற்கை வளங்கள் வரை அனைத்தையும் விழுங்கி வருகிறது. இந்த பேரழிவில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிலைமை கைமீறிப் போனதை அடுத்து, அந்நாட்டு ஜனாதிபதி கேப்ரியல் போரிக் நாடு முழுவதும் அவசரநிலையை அறிவித்துள்ளார்.சிலியின் மத்திய பகுதியில் உள்ள பையோபையோ மற்றும் அதனை ஒட்டிய நூபிள் பகுதிகளில் தீ வேகமாக பரவி வருகிறது. தீயின் கோர முகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் கருகி சாம்பலாகி விட்டன.

குடியிருப்பு பகுதிகளும் தப்பவில்லை; நூற்றுக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து சிதிலமடைந்துள்ளன.இந்த சூழலில், சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்திருக்கக்கூடும் என ஜனாதிபதி போரிக் அச்சம் தெரிவித்துள்ளார்.
தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே, தீ விரைவில் அணைந்து விடும் என்ற நம்பிக்கையில், வனப்பகுதியை ஒட்டி வசித்து வரும் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.
இதனால் உயிர் ஆபத்து அதிகரித்து, நிலைமை மேலும் மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.காட்டுத்தீயின் தாக்கம் அண்டை நாடான அர்ஜென்டினாவையும் விட்டு வைக்கவில்லை. சமீப வாரங்களில், அந்நாட்டின் தெற்கு படகோனியா பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் தீயில் கருகி, இயற்கை பேரழிவாக மாறியுள்ளது.
English Summary
Devastation rocks Chile 18 dead wildfires State emergency declared