நெரிசலுக்கு முடிவு? சென்னை விமான நிலையத்தில் சாட்டிலைட் முனையம்...! - AAI ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பு
end congestion Satellite terminal Chennai airport AAI submits study report
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கும் முக்கிய கட்டமாக, செயற்கைக்கோள் (Satellite) முனையம் மற்றும் அதற்கான உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்கும் நோக்கில், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) நீர்வளத் துறையிடம் விரிவான ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
புதிய சாட்டிலைட் முனையத்திற்கான இணைப்புக்கு கூடுதல் நிலம் வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது உள்ள நிலத்திலேயே மேம்பாலம் அமைக்கும் வகையில் AAI ஒரு புதிய வடிவமைப்பு திட்டத்தை உருவாக்கியுள்ளது.

இந்த 4 வழி மேம்பாலம், தேசிய நெடுஞ்சாலை தொடங்கும் பகுதியில் இருந்து தண்டலம் அருகே உள்ள மாதவ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் ஆரம்பித்து, அடையாறு ஆற்றின் வழியாக சென்று முனையத்தின் நுழைவு வாயிலை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
அடையாறு ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் தூண்கள், மழைக்காலம் அல்லது வெள்ள நேரங்களில் நீரோட்டத்தை தடை செய்யுமா என்ற சந்தேகத்தைத் தொடர்ந்து, மாநில அரசு ஆய்வு நடத்துமாறு கேட்டிருந்தது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் நீர்வள மையம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை தற்போது இந்திய விமான நிலைய ஆணையம் நீர்வளத் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
இந்த திட்டத்திற்கு நீர்வளத் துறை மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் அனுமதி கிடைத்தவுடன், 4 வழி மேம்பாலம் மற்றும் சாட்டிலைட் முனைய கட்டுமானத்திற்கான நிதி ஒதுக்கீட்டை AAI அறிவிக்க உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வர இன்னும் 4–5 ஆண்டுகள் ஆகும் என்பதால், அதுவரை தற்போதைய சென்னை விமான நிலையத்தில் நிலவும் நெரிசலை குறைக்க இந்த சாட்டிலைட் முனையம் திட்டம் மிகவும் அவசியமானது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த ambitious திட்டம் முதலில் 8 ஆண்டுகளுக்கு முன்பே முன்வைக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு காரணங்களால் நீண்ட காலம் தாமதமடைந்து வந்தது. 2024-ஆம் ஆண்டில் இந்திய விமான நிலைய ஆணையம் இதனை மீண்டும் கையில் எடுத்த பிறகு, தற்போது இந்த திட்டம் புதிய வேகத்துடன் முன்னேறி வருகிறது.
English Summary
end congestion Satellite terminal Chennai airport AAI submits study report