டாஷ் கேமராவில் சிக்கிய அச்சுறுத்தல்: பெங்களூரு சாலையில் கத்தி மிரட்டல்! - வைரல் வீடியோ
Threat captured dashcam Knife threat Bengaluru road Viral video
கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் நடுரோட்டில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் நகர மக்களை பதற வைத்துள்ளது. காரில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு குடும்பத்தினரை, இளைஞர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல் காட்சி காரில் பொருத்தப்பட்டிருந்த டாஷ் கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வெளியான வீடியோவில், காரில் இருந்த ஒருவர் அந்த இளைஞரிடம் “ஏன் எங்களை திட்டுகிறாய்?” என்று கேட்க, ஆத்திரத்தில் கொதித்த அந்த இளைஞர் தனது பைக்கை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, காரின் அருகே வந்து பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக் காட்டி,“சத்தம் போட்டால் கொன்று விடுவேன்” என்று கொலை மிரட்டல் விடுப்பது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரின் பெயர் சையத் அர்பாஸ் கான் என்றும், அவர் ஒரு மீன் கடையில் வேலை செய்து வருபவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை பெங்களூரு நகரக் காவல்துறையே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள்,“சாலையில் மோசமாக நடந்து கொள்வதையோ, பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடத்தைக்கோ பெங்களூரு போலீசார் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
வன்முறைச் செயல்கள், ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல், அல்லது பொது இடங்களில் அநாகரிகமாக நடந்து கொள்வது போன்றவற்றில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளனர்.அந்த பதிவில் மேலும்,“இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பொது அமைதியைப் பேணுவதற்கும், சாலையில் அட்டகாசமாக நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் அமைதியாகவும், பொறுப்புடன் நடந்துகொள்ளவும், சட்டத்திற்கு முழுமையாக ஒத்துழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Threat captured dashcam Knife threat Bengaluru road Viral video