ரூ. 1,470 கோடி லாட்டரி பரிசு வென்ற பணத்தில் பாதியை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கிய பிரிட்டன் பெண்மணி; குவியும் பாராட்டு..!
British woman donates half of Rs 1470 crore lottery win to charity
பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் சமூகப் பணியாளரும் ஆசிரியருமான பிரான்சிஸ் கான்னோலி, EuroMillions லாட்டரியில் 115 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,470 கோடி) வென்றுள்ளார். இந்த பணத்தொகையில் இருந்து பாதியை தொண்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர் மக்களின் நலனுக்கும் நன்கொடையாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிரான்சிஸ் மற்றும் அவரது கணவர் பேடி ஆகியோருக்கு இந்த லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. குடும்பத்தின் உடனடித் தேவைகள் பூர்த்தியான பிறகு, மீதமுள்ள தொகையைப் பிறருக்குப் பகிர்ந்தளிப்பதுதான் மனித இயல்பு என்று அவர் கூறியுள்ளார்.

அதாவது, புகழ்பெற்ற பாடகியும் தொண்டுள்ளம் கொண்டவருமான டாலி பார்ட்டனின் (Dolly Parton) செயல்பாடுகளே தமக்கு இந்த நற்செயலுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வென்ற தொகையில் சுமார் பாதியை (சுமார் ரூ. 632.5 கோடி) சமூக நலத் திட்டங்களுக்காக நன்கொடையாக பிரான்சிஸ் வஹாங்கியுள்ளார். அத்துடன், 'PFC Trust' என்ற தொண்டு நிறுவனத்தையும் தொடங்கிப் பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறார். லாட்டரி மூலம், பெரிய தொகையை வென்றபோதிலும், இந்தத் தம்பதியினர் வடகிழக்கு இங்கிலாந்தில் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையையே தொடர்ந்து பின்பற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் பணத்தை வீணடிக்காமல், பயன்படுத்தப்பட்ட சொகுசுக் கடிகாரங்கள் மற்றும் கார்களை மட்டுமே வாங்க விருப்பம் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இதுபற்றி பிரான்சிஸ் தெரிவித்துள்ளதாவது;
''உலகிலேயே மிகப்பெரிய பணக்காரராகவோ அல்லது அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்துபவராகவோ ஆக விரும்புபவர்களுக்கு மட்டுமே அதிக பணம் தேவை. என்னைப் பொறுத்தவரை, பிள்ளைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்ட பிறகு, அளவுக்கு அதிகமான பணத்தைக் கையில் வைத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
British woman donates half of Rs 1470 crore lottery win to charity