'ஷேக் ஹசீனாவின் உயிரை காப்பாற்றியதே இந்தியாவில் இருந்த வந்த அழைப்புதான்': வங்கதேச வன்முறை குறித்த புத்தகத்தில் தகவல் ..!
A book on the violence in Bangladesh says that it was a call from India that saved Sheikh Hasina life
வங்கதேசத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நாட்டு அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் வன்முறையாக மாறியதில், பிரதமர் வீடு, அமைச்சர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. நாடு முழுதும் அரங்கேறிய கலவரங்களால் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த அசாதாரணமான சூழ்நிலையில், பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவிற்கு தப்பி வந்தார். தற்போது வரை அவரது இருப்பிடம் குறித்த தகவல் ரகசியமாக உள்ளது. இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்றது.

இந்த மாணவர்களின் போராட்டம் தொடர்பாக, 'இன்ஷா அல்லாஹ் பங்களாதேஷ்; தி ஸ்டோரி ஆப் ஆன் அன்பினிஸ்டு ரிவோலுஷன்' என்ற புத்தகத்தை, இந்தியர்களான தீப் ஹால்டர், ஜெய்தீப் மஜும்தார் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த சாஹிதுல் ஹசன் கோகோன் ஆகியோர் எழுதியுள்ளனர். இவர்கள் மூவரும் பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் வங்கதேசத்தின் போராட்டம் குறித்து அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
'போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தாக்குதல் நடத்தியதுடன், உள்ளே நுழைய முயன்றனர். அன்றைய தினம் மதியம் 12:00 மணிக்கு, ராணுவ தளபதி வக்கர் - உஸ் - ஜமான் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள், நாட்டை விட்டு உடனடியாக வெளியேறும்படி ஷேக் ஹசீனாவை வலியுறுத்தினர். தன் உயிரே போனாலும் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என, ஷேக் ஹசீனா அடம் பிடித்தார்.

தொடர்ந்து, 01:30 மணியளவில், நன்கு அறிமுகமான இந்திய அதிகாரி ஒருவரிடம் இருந்து, அவருக்கு அழைப்பு வந்தது. அவரிடம் பேசிய பின், நாட்டை விட்டு புறப்படுவது தான் சரியான முடிவு என ஷேக் ஹசீனா நம்பினார்.
இந்திய அதிகாரி சொன்னதும், ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டு, பிற்பகல் 02:42 மணியளவில், ராணுவ விமானத்தில் புறப்பட்டார். இந்தியாவின் அவசர அழைப்பும், அதைத் தொடர்ந்து ஹசீனா எடுத்த முடிவும், 1975-இல் அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டது போன்றதொரு துயரமான முடிவு மீண்டும் ஏற்படுவதை தவிர்க்க உதவியது.
மாணவர்களின் போராட்டத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., மற்றும் அதன் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் ஹசீனா சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நெருங்கி பழகியதால், தன் ஆட்சியை கவிழ்க்க பாகிஸ்தான் இப்படி சதிவேலையில் ஈடுபட்டதாக ஷேக் ஹசீனா சந்தேகிக்கிறார்.' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
A book on the violence in Bangladesh says that it was a call from India that saved Sheikh Hasina life