ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர் துயரம்...! 'உடனடியாக நூல் வழங்குக, சம்பளத்தை உயர்த்துக'...! - தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Srivilliputhur weavers distress Provide yarn immediately increase salaries Nayinar Nagendran urges Tamil Nadu government
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆயிரக்கணக்கான கைத்தறி நெசவாளர் குடும்பங்கள் நூல் தட்டுப்பாடு காரணமாக கடுமையான வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், அவர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"தமிழக மக்களுக்கு பாரம்பரிய கைத்தறி ஆடைகளை நெய்து வழங்கி வரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நெசவாளர்கள், இன்று தங்களின் அன்றாட உணவுக்கே போராட வேண்டிய துயரமான நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

தங்களது பசியை போக்கிக்கொள்ள கஞ்சித் தொட்டி திறந்து போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக கூட்டுறவு சங்கங்கள் மூலம் நூல் வழங்கப்படாததால், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் தொழிலின்றி, வருமானமின்றி கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
இதுபோதாதென்று, பொங்கல் பண்டிகைக்காக புதிய ரக சேலைகளை தயாரிக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பையும் விஜய் அரசு நெசவாளர்கள் மீது சுமத்தியுள்ளது. புதிய வடிவமைப்புக்கு ஏற்ப தறிகளை மாற்றியமைக்க ஒவ்வொரு குடும்பமும் சுமார் ரூ.10 ஆயிரம் வரை கூடுதல் செலவினை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, புதிய உற்பத்தியை தொடங்க ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்க வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.அதிகாரிகள் அளித்துள்ள தற்காலிக உறுதிமொழிகள் மட்டுமே போதுமானதாக இருக்காது.
நெசவாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு உடனடியாக தலையிட்டு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்.கடந்த இரண்டு மாதங்களாக வேலை இழந்த ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கப்பட வேண்டும்.
அதோடு, அவர்களின் உழைப்புக்கு ஏற்ற வகையில் சம்பள உயர்வும் அறிவிக்கப்பட வேண்டும்.மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் தங்குதடையின்றி நூல் விநியோகம் நடைபெறுவதை உறுதி செய்வதுடன், நெசவாளர்களின் நீண்டகால நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் அரசு காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
உழைக்கும் நெசவாளர்கள் மீண்டும் கஞ்சித் தொட்டி திறந்து போராடும் நிலை உருவாகாமல் தடுப்பது அரசின் கடமையாகும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
English Summary
Srivilliputhur weavers distress Provide yarn immediately increase salaries Nayinar Nagendran urges Tamil Nadu government