74 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வந்தது...! 52 உயிர்களைப் பலிவாங்கிய விமானத்தின் பாகங்கள்... அட்லாண்டிக் கடலில் மீட்கப்பட்டது எப்படி...?
74 year mystery come end How parts plane that killed 52 people recovered from Atlantic Ocean
74 ஆண்டுகளாக மர்மமாக நீடித்து வந்த விமான விபத்தின் பின்னணி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 1952-ம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் மாயமான விமானத்தின் இறக்கைகள் மற்றும் வால் பகுதி உள்ளிட்ட முக்கிய பாகங்கள் கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் விமானப் பயணம் மக்களின் அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு அவசரகால வழிகள், உயிர்காப்பு கவசங்கள் மற்றும் அவற்றை பயன்படுத்தும் முறைகள் குறித்து பயணிகளுக்கு விளக்கப்படுவது வழக்கம்.
இதுபோன்ற பாதுகாப்பு நடைமுறைகளின் அவசியத்தை உலகம் உணரச் செய்த முக்கிய சம்பவங்களில் ஒன்றாக 1952-ம் ஆண்டு நடந்த இந்த கோர விமான விபத்தும் கருதப்படுகிறது.அந்த ஆண்டு, அப்போது அமெரிக்காவின் தன்னாட்சி பிரதேசமாக இருந்த போர்ட்டோ ரிகோவின் சான் ஜூவான் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி பயணிகள் விமானம் புறப்பட்டது.
அதில் 69 பேர் பயணம் செய்தனர்.விமானம் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் விமானம் மாயமானது. இரண்டு என்ஜின்களும் செயலிழந்ததால் விமானம் கடலில் விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் விமானம் மூழ்கத் தொடங்கியபோது, உயிர்காப்பு உபகரணங்களின் உதவியுடன் 17 பேர் கடலில் தத்தளித்தனர். ஆனால், 52 பேர் விமானத்துடன் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மட்டுமே பின்னர் மீட்கப்பட்டன.
கடலில் தத்தளித்தவர்கள் கப்பல்கள் மூலம் மீட்கப்பட்ட போதிலும், கடலின் ஆழம் காரணமாக விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடிப்பது பல ஆண்டுகளாக சாத்தியமாகவில்லை.
இந்த நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2 ஆயிரம் அடி ஆழத்தில் விமானத்தின் இறக்கைகள், வால் பகுதி உள்ளிட்ட முக்கிய பாகங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், 74 ஆண்டுகளாக நீடித்து வந்த அந்த விமானத்தின் சிதைவுகளைத் தேடும் முயற்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
74 year mystery come end How parts plane that killed 52 people recovered from Atlantic Ocean