திடீரென மாறப்போகும் வானிலை... குடை ரெடியா...? நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை கொட்டப்போகிறது தெரியுமா...?
weather about change suddenly Is your umbrella ready Do you know which districts going rain tomorrow
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வரும் 24 மற்றும் 25-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். 26-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது.
27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பநிலையைப் பொறுத்தவரை, வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு குறைவு. ஈரோடு, கரூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, 27-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
மேலும், அந்தமான் கடல், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளிலும் வரும் நாட்களில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
weather about change suddenly Is your umbrella ready Do you know which districts going rain tomorrow