வங்கக்கடலில் வேகமெடுக்கும் வானிலை அபாயம்! தமிழகத்தை நோக்கி புயல் பாதை – கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
weather hazard intensifying Bay of Bengal storm headed towards Tamil Nadu orange alert issued heavy rainfall
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு, நேற்று (07.01.2026) காலை 8.30 மணியளவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இந்த மண்டலம் தற்போது இலங்கை மட்டகிளப்பிற்கு கிழக்கு–தென்கிழக்கே 790 கி.மீ, திரிகோணமலைக்கு 880 கி.மீ, காரைக்காலுக்கு 1150 கி.மீ, சென்னைக்கு 1270 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மணிக்கு சுமார் 15 கி.மீ வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் இந்த மண்டலம், அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இது புயலாக மாறும் அபாயம் அதிகரித்துள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதன் நேரடி தாக்கமாக இன்று (08.01.2026) கடலோர தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே, ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 12 முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பதிவாகலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் அடுத்த 4 நாட்கள் வரை மாநிலத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யக்கூடும் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்; தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்.
English Summary
weather hazard intensifying Bay of Bengal storm headed towards Tamil Nadu orange alert issued heavy rainfall