தமிழகத்தை நனைக்க வரும் பருவமழை...! - 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை...!
Monsoon coming drench Tamil Nadu Heavy rain warning more than 20 districts
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய முன்னறிவிப்பின்படி, தென்மேற்கு பருவமழை கேரளக் கரையை ஜூன் 4-ஆம் தேதி அடையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதன் தாக்கமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழைச் செயல்பாடுகள் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் சுமார் 5.8 கிலோமீட்டர் உயரம் வரை வளிமண்டலச் சுழற்சி நிலவி வருகிறது. மேலும் கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய சத்தீஸ்கர் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல அமைப்பில் இருந்து வடதமிழகம் வரை நீளும் காற்றழுத்தத் தாழ்வு பாதை காணப்படுவதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

இன்று (ஜூன் 2)
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
ஜூன் 3 மற்றும் ஜூன் 4
மாநிலத்தின் பல பகுதிகளில் மிதமான மழை தொடரும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடிய கனமழை பதிவாகக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை நிலவரம்
ஜூன் 2 முதல் ஜூன் 6 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. வடஉள் தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டும் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
சென்னை வானிலை எப்படி?
சென்னையில் இன்று வானம் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸ் வரையும் பதிவாகலாம்.
நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையின் வருகைக்கான அறிகுறிகள் வலுப்பெற்று வரும் நிலையில், தமிழகத்தின் பல பகுதிகள் அடுத்த சில நாட்களில் மழையின் அருளைப் பெறத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Monsoon coming drench Tamil Nadu Heavy rain warning more than 20 districts