நீதிமன்றத்தில் வென்ற 'புலி'...! முதலமைச்சர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி ...! - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Puli wins court Case filed against Chief Minister Vijay dismissed Court orders action
முதலமைச்சர் விஜயின் இல்லத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது, திரைப்பட வருமானம் தொடர்பான சில கணக்கியல் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, *புலி* திரைப்படத்திற்காக பெறப்பட்டதாக கூறப்படும் ரூ.15 கோடி வருமானம் முறையாக கணக்கில் இடம்பெறவில்லை என்ற அடிப்படையில், ரூ.1 கோடியே 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி பரிசீலித்து தள்ளுபடி செய்திருந்தது.இதனையடுத்து, கொடுங்கையூரைச் சேர்ந்த எம்.ராஜ்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், வருமான வரித்துறை சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மதிப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் அபராத உத்தரவு ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்து, முதலமைச்சர் விஜய்க்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும், வருமான மறைப்பு தொடர்பாக மோசடி, குற்றச்சதி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய ஆவணங்களை அமலாக்க இயக்குநரகத்துக்கு அனுப்பவும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற அனுமதி கோரப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதிகள், மனுவை திரும்பப் பெறுவதற்கு அனுமதி வழங்கியதுடன், வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் கடந்த சில நாட்களாக கவனம் பெற்றிருந்த இந்த வழக்கில் எதிர்பாராத சட்டத் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Puli wins court Case filed against Chief Minister Vijay dismissed Court orders action