வறண்ட வெப்பத்துக்கு பின் மழை வரவு… கடலில் தாழ்வு பகுதி, வானிலையில் திடீர் மாற்றம்! - வானிலை ஆய்வு மையம்
After dry heat rain arrives low lying area sea sudden change weather Meteorological Department
பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளிலும், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி செயல்பட்டு வருகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 19-ந்தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். ஆனால் 20-ந்தேதி சில இடங்களில் லேசான மழை தூறல் காணப்படலாம்.
21-ந்தேதி மழை தீவிரம் சற்று அதிகரித்து, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வடதமிழக மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் உருவாகும் சூழலும் நிலவுகிறது.
குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த சில நாட்களில் வெப்பநிலையும் உயரக்கூடும். தமிழகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2° செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும். வெப்பநிலை அதிகபட்சமாக 31–32°C வரைவும், குறைந்தபட்சமாக 22–23°C வரைவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும். மணிக்கு 40–50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும் அபாயம் உள்ளதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்கு கடற்பகுதிகளிலும் 17 முதல் 19-ந்தேதி வரை கடும் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.மொத்தத்தில், சில நாட்கள் வெப்பம் – பனிமூட்டம் – பின்னர் மழை என வானிலை மாற்றம் காணப்படும் என்பதால் பொதுமக்களும் மீனவர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
After dry heat rain arrives low lying area sea sudden change weather Meteorological Department