மோந்தா புயலுக்குப் பிறகு மீண்டும் கடல் கொந்தளிப்பு! நவம்பரில் வலுவான புயல் உருவாகும் சாத்தியம்...! - வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!
After Cyclone Monta sea turbulence again Possibility strong storm November Meteorologist warns
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சில நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் தான் புயல்களும் கனமழையும் அதிகம் ஏற்படும் காலமாகும். ஆனால் இம்முறை, பருவமழை துவங்கிய சில நாட்களிலேயே ‘மோந்தா’ புயல் உருவாகி ஆந்திரா நோக்கி நகர்ந்தது.
இதன் விளைவாக, தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் மட்டுமே மிதமான மழை பதிவானது. தற்போது மழை சற்று இடைவெளியில் இருந்தாலும், மீண்டும் பருவக்காற்று பலம் பெறும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், வானிலை நிபுணர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்ததாவது,"அடுத்த மாதம் (நவம்பர்) 10ஆம் தேதி முதல் பருவக்காற்று திசைமாற்றம் பெற்று மீண்டும் வலுப்பெறத் தொடங்கும். குறிப்பாக நவம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு மழை தீவிரம் அதிகரிக்கும்.

அதோடு, வங்கக்கடலில் ஒரு அல்லது அதற்கும் மேற்பட்ட வலுவான புயல்கள் உருவாகும் சாத்தியம் உள்ளது".புயல்கள் உருவாக கடலின் மேற்பரப்பு வெப்பநிலை (Sea Surface Temperature) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது வங்கக்கடல் பகுதியில் இதற்கான சூழல் சாதகமாக உள்ளது. குறிப்பாக, கிழக்கிந்திய பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் வெப்பநிலை உயர்ந்து, அதே சமயம் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நிலவுவது, வானிலை மாறுதல்களுக்கு வழிவகுக்கிறது.
இதுவே ‘எதிர்மறை இந்தியப் பெருங்கடல் இருமுனை நிகழ்வு (Negative IOD)’ என அழைக்கப்படுகிறது” என்றார்.இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களில் இந்த நிகழ்வு மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் கடல் சார்ந்த வானிலை அலைவுகள் அதிகரித்து, புயல் உருவாக்கத்துக்கான வாய்ப்பு வலுப்பெறும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், கடந்த 2019ம் ஆண்டில் இதேபோன்ற நெகட்டிவ் IOD நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் தொடர் புயல்கள் உருவானது குறிப்பிடத்தக்கது. அவற்றில் சில ‘சூப்பர் புயல்’, ‘அதி தீவிர புயல்’, ‘மிக தீவிர புயல்’ என வகைப்படுத்தப்பட்டன. அதுபோன்ற வானிலை இயக்கங்கள் இம்முறை மீண்டும் நிகழ வாய்ப்பு உள்ளது என ஹேமச்சந்தர் குறிப்பிட்டார்.இது தமிழகத்திற்கும் தென் இந்தியாவிற்கும் நல்ல மழையை கொடுக்கும் பருவம் ஆக இருக்கலாம்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
After Cyclone Monta sea turbulence again Possibility strong storm November Meteorologist warns