இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக காலடி எடுக்கிறது OpenAI.. AI புரட்சியில் புதிய அத்தியாயம்!
OpenAI officially sets foot in India A new chapter in the AI revolution
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஓபன்ஏஐ (OpenAI), இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய தலைநகர் புதுடில்லியில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்கவுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வருகையை பதிவு செய்கிறது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக சாட்ஜிபிடி (ChatGPT) பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவுக்குப் பிறகு, இந்தியாவே ChatGPT-யின் இரண்டாவது பெரிய சந்தையாக மாறியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய பயனாளர்கள் நான்கு மடங்கு அதிகரித்துள்ளனர்.
டெவலப்பர்கள் பங்களிப்பிலும் இந்தியா உலகின் முதல் ஐந்து சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக மாணவர்கள் அதிகளவில் ChatGPT-யை பயன்படுத்தும் நாடாக இந்தியா முன்னிலையில் உள்ளது. இதுவே OpenAI-க்கு இந்தியாவில் வலுவான தளமாக அமைகிறது.
ஏற்கனவே இந்தியாவில் ஒரே ஒருவராக பணியாற்றி வந்தவர் பிரக்யா மிஸ்ரா. இவர் கடந்த ஆண்டு OpenAI-யில் இணைந்து, பொது கொள்கை மற்றும் கூட்டாண்மை பிரிவை வழிநடத்தி வருகிறார். தற்போது நிறுவனம் மேலும் பணியாளர்களை நியமித்து தனது குழுவை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
மேலும், OpenAI, இந்திய அரசின் IndiaAI Mission (மொத்தம் $1.2 பில்லியன் மதிப்பிலான திட்டம்) உடன் கூட்டாண்மை செய்து, உள்ளூர் மொழி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது மாணவர்கள், டெவலப்பர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
இதோடு, இந்தியாவில் தனது முதல் டெவலப்பர் தின நிகழ்வையும் OpenAI நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப நிபுணர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையாளர்கள் நேரடியாக பயனடையவுள்ளனர்.
இந்த விரிவாக்கம், இந்தியாவில் உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு விதிமுறைகளில் OpenAI தனது பங்களிப்பை அதிகரிக்க வழிவகுக்கும். உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, எதிர்கால AI வளர்ச்சிக்கான முக்கிய சந்தையாக கருதப்படுகிறது.
English Summary
OpenAI officially sets foot in India A new chapter in the AI revolution