செம்ம! தயாரான நிசார் செயற்கைக்கோள்... அடுத்த மாதம் 14ஆம் தேதி விண்ணில் ஏவ திட்டம்...!
Nisar satellite ready planned to be launched on the 14th next month
'நாசா-இஸ்ரோ செயற்கை துளை ரேடார்' (நிசார்) என்ற செயற்கைக்கோளை, பூமியை கண்காணித்து தகவல்களை சேகரிப்பதற்காக அமெரிக்காவின் நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து உருவாக்கியுள்ளது. இது நாசா மற்றும் இஸ்ரோவின் கூட்டு முயற்சியாகும்.மேலும் கடந்த 2015-ம் ஆண்டு, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ''ஒபாமா'', இந்தியா வந்தபோது இந்தியாவும், அமெரிக்காவும் இத்திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டன.

இந்த செயற்கைக்கோள் அமெரிக்கா கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு பிறகு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும், விண்ணில் ஏவும்போது எதிர்பார்த்ததைவிட அதிக வெப்பம் அடைவதற்கான அபாயத்தை குறைக்க பிரதிபலிப்பு பூச்சு பயன்படுத்த கலிபோர்னியாவிலுள்ள உற்பத்தியாளரிடம் செயற்கைக்கோள் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கு மீண்டும் சரி செய்யப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டது.
இதில், பல்வேறு கட்ட சோதனைகளுக்காக நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் தேதி தள்ளிக்கொண்டே போனது. அதன்பின்னர், கடந்த மாதம் பெங்களூருவிலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திற்கு நிசார் செயற்கைக்கோள் முழு சோதனையை முடித்து கொண்டுவரப்பட்டுள்ளது.
இது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு அடுத்த மாதம் 14-ந் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 747 கிலோ மீட்டர் சூரிய ஒத்திசைவான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.இந்த 2,800 கிலோ எடை கொண்ட நிசார் செயற்கைக்கோள் 3 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்டுள்ளது. அத்துடன், 6500 வாட்ஸ் சக்தி திறன் உள்ளது.
இந்த செயற்கைக்கோள் தயாரிக்க சுமார் ரூ.1,805 கோடி செலவிட்டுள்ளது.இந்த செயற்கைக்கோள் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக கண்காணிக்க உதவுகிறது. குறிப்பாக, பனிப்பாறைகள், காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்யும்.அத்துடன், நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு போன்ற பேரிடர்களை கண்காணிக்கவும், அவற்றின் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும்.
அத்துடன் காடுகள் மற்றும் சதுப்பு நிலங்கள் போன்ற இயற்கை வளங்களை நிலையாக நிர்வகிக்க உதவி செய்கிறது. தொலைதூர உணர்தலுக்காகவும், பூமியில் இயற்கை செயல்முறைகளை கண்காணிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும்.இதன் இடதுபுறம் நோக்கிய கருவிகள் அண்டார்டிக் பகுதியிலுள்ள 'கிரையோஸ்பியர்' என்று அழைக்கப்படும் பனிப்பாறைகள், பனிமலைகள், பனிமூடிய பகுதிகள், உறைந்த நீர் மற்றும் பனிப்புயல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
இந்த மேம்பட்ட ரேடார் இமேஜிங்கைப் பயன்படுத்தி பூமியின் நிலம் மற்றும் பனி நிறைகளின் உயரத்தை ஒரு மாதத்திற்கு 4 முதல் 6 முறை 5 முதல் 10 மீட்டர் தெளிவுத்திறனில் வரைபடமாக்கும் திறன் கொண்டது என்று இஸ்ரோ மற்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
English Summary
Nisar satellite ready planned to be launched on the 14th next month