உடனே திரும்பப் பெறுங்க...! - டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்திற்கு எதிராக பிரேமலதா அதிரடி முழக்கம்...!
Withdraw immediately Premalatha slogan against appointment Delhi Special Representative
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை கடுமையாக எதிர்த்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"மேகதாது அணை விவகாரம் போன்ற தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த மிக முக்கிய பிரச்சினையில், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக வெங்கடநாராயணா நியமிக்கப்பட்டிருப்பதை தேமுதிக சார்பில் கடுமையாக கண்டிக்கிறோம்.

ஏற்கனவே கர்நாடக மாநில முதல்-அமைச்சர் டி.கே. சிவக்குமார் மற்றும் அங்குள்ள நீர்வளத்துறை அமைச்சர், ‘எங்கள் மாநில எல்லைக்குள் மேகதாது அணையை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்ற உறுதியான நிலைப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே காவேரி நீர் பிரச்சினை தீவிரமாக நீடித்து வருகிறது.
அதனுடன் தொடர்புடைய மேகதாது அணை விவகாரத்திலும், தமிழ்நாட்டின் நீருரிமையை பாதுகாக்கும் போராட்டம் இடையறாது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றமும், காவேரி மேலாண்மை தொடர்பான அமைப்புகளும் சட்ட மற்றும் நிர்வாக ரீதியான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள சூழலிலும், கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
இத்தகைய முக்கியமான சூழ்நிலையில், கர்நாடக பின்னணி கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற வேதனையை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஏராளமாக இருக்கையில், ஏன் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது என்பதை தமிழக அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
எனவே, தமிழக அரசு இந்த நியமனத்தை உடனடியாக மறுபரிசீலனை செய்து, வெங்கடநாராயணாவின் நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்துள்ளார்.
English Summary
Withdraw immediately Premalatha slogan against appointment Delhi Special Representative