நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து சரிவு: பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு..!
Water release at Periyar Dam reduced due to lack of rain in catchment areas water flow declines
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட பாசன, குடிநீர் தேவைக்கும், வைகை அணைக்கும் முக்கிய நீராதாரமாக முல்லை பெரியாறு அணை உள்ளது. இந்த அணையால் தேனி, மதுரை உள்ளிட்ட 05 மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பயனடைகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூன் 01-ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்த நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக பாசனத்திற்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஓரளவு மழை பெய்ததால் நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் நீர்திறப்பு விநாடிக்கு 1,600 கன அடியாகவும், பின்னர், 1,800 கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,252.36 கன அடியாக மேலும் குறைந்தது. இதையடுத்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறப்பு 689 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 132.35 அடியாக உள்ள நிலையில், மொத்த நீர் இருப்பு 5,246 மில்லியன் கன அடியாக உள்ளது.
நேற்று அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர் கேம்ப் நீர் மின் உற்பத்தி நிலையத்தில் அதிகபட்ச மின் உற்பத்தி அளவான 168 மெகா வாட் மின் உற்பத்தி நடைபெற்றது. இன்று காலை முதல் நீர் திறப்பு குறைக்கப்பட்டதன் எதிரொலியாக மின் உற்பத்தி 62 மெகா வாட்டாக குறைந்துள்ளது.

மேலும், தேவதானப்பட்டி அருகே, 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.05 அடி. நீர்வரத்து இல்லை. நீர்வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 199.25 மில்லியன் கன அடியாகவுள்ளது.
பெரியகுளம் அருகே, 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 80.68 அடி. நீர்வரத்து இல்லை. ஆனால், நீர்வெளியேற்றம் 03 கனஅடியாகும். நீர் இருப்பு 39.67 மில்லியன் கனஅடி. உத்தமபாளையம் அருகே, 52.55 அடி உயரமுள்ள சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 46.60 அடி. நீர்வரத்து 03 கனஅடி. நீர்வெளியேற்றம் இல்லை. நீர் இருப்பு 61.27 மில்லியன் கன அடியாகவுள்ளது.
English Summary
Water release at Periyar Dam reduced due to lack of rain in catchment areas water flow declines