நைசாக கொள்ளையா...? கூட்டுறவு வங்கிக்குள் புகுந்த முகமூடி கும்பல்...! - அலறிய ஊழியர்கள்...!
Was it robbery Masked gang entered Cooperative Bank Screaming employees
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நள்ளிரவில் மர்ம நபர்கள் துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல மணி நேரம் போராடியும் இரும்பு லாக்கரை உடைக்க முடியாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடியாமல் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள எப்போதும்வென்றானை அடுத்த வெள்ளையம்மாள்புரத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு நேற்று காலை வழக்கம்போல் செயலாளர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் சென்றனர். அப்போது வங்கியின் வெளிக்கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கினர்.அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் முகமூடி அணிந்த இரு மர்ம நபர்கள், வங்கியின் இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்தது பதிவாகியிருந்தது.
பின்னர் மரக்கதவையும் உடைத்து, லாக்கர் அமைந்திருந்த அறைக்குள் அவர்கள் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்பிறகு, இரும்பு லாக்கரை உடைக்க பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். முதலில் லாக்கரை பலவந்தமாக உடைக்க முயன்றும் வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து கம்பி வெட்டும் எந்திரத்தைப் பயன்படுத்தி லாக்கரை அறுக்க முயன்றபோதும், அதன் உறுதியான அமைப்பு காரணமாக அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.இதில் மனம் தளராத மர்ம நபர்கள், லாக்கரின் அருகிலிருந்த சுவரில் துளையிட்டு உள்ளே நுழைய முயன்றுள்ளனர்.
ஆனால், அந்தச் சுவர் முழுவதும் வலுவான கான்கிரீட் அமைப்பில் இருந்ததால் அந்தத் திட்டமும் பலனளிக்கவில்லை.சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராடிய கொள்ளையர்கள், அதிகாலை 1 மணியளவில் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தோல்வியடைந்த கொள்ளை முயற்சியால், வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் பாதுகாப்பாக தப்பியுள்ளன.
இந்தச் சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், வங்கிக்குள் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சேகரிக்கப்பட்ட தடயங்களின் அடிப்படையில் முகமூடி அணிந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அருகிலுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Was it robbery Masked gang entered Cooperative Bank Screaming employees