வார்த்தைகளில் மாற்றம்... கொள்கையில் வேகம்...! ‘சமூக நீதித்துறை’ என பெயர் மாறியதன் பின்னணி என்ன...?
Change words Speed policy What background behind name change Social Justice Department
தமிழக அரசின் முக்கிய நிர்வாகத் துறைகளில் ஒன்றான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர், இனி 'சமூக நீதித்துறை' என மாற்றப்பட்டுள்ளது. சமூக நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகக் கொள்கையை வலியுறுத்தும் வகையில் இந்த முக்கிய நிர்வாக மாற்றத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ள அரசாணையின்படி, இதுவரை 'ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை' என்ற பெயரில் செயல்பட்டு வந்த துறை, இனி அனைத்து அரசு அலுவல் நடைமுறைகளிலும் 'சமூக நீதித்துறை' என்ற பெயரில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்தத் துறையின் மூலம், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, இலவச மாணவர் விடுதிகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்குதல், தொழில் முன்னேற்றத் திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பெயர் மாற்றத்தைத் தொடர்ந்து, அரசின் அனைத்து அலுவல் ஆவணங்கள், அரசாணைகள், நிர்வாகக் கோப்புகள், துறை சார்ந்த பதிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களில் புதிய பெயரையே பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாற்றத்தை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் வணிக விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணை உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, சமூக நீதி சார்ந்த நிர்வாக அணுகுமுறையை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
English Summary
Change words Speed policy What background behind name change Social Justice Department