அதிர்ச்சி மரணங்கள்... உடம்பில் காயங்களா...? பாழடைந்த கிணற்றில் 2 வாலிபர்கள் பிணமாக மீட்கப்பட்ட பரபரப்புப் பின்னணி என்ன...?
Shocking deaths bodily injuries What background sensational discovery bodies 2 young men dilapidated well
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கிணற்றில், அழுகிய நிலையில் இரண்டு வாலிபர்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள ஆதிகுடி கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அமைந்துள்ள பயன்பாடற்ற கிணற்றில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி விவசாயிகள் காவலர்களுக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து லால்குடி துணைக் காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், ஆய்வாளர் கருணாகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, பல நாட்களாக கிணற்றில் கிடந்ததாகக் கருதப்படும் இரண்டு ஆண்களின் உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

உயிரிழந்தவர்கள் சுமார் 30 முதல் 35 வயதுக்குள் இருக்கக்கூடும் என்றும், இருவரின் உடல்களும் தலைகுப்புற நிலையில் கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கிணற்றின் கரைப்பகுதியில் கைலி, டி-சட்டை, காலணி, செல்போன், அரிவாள் மற்றும் கடப்பாரை உள்ளிட்ட பொருட்கள் சிதறிக் கிடந்தது விசாரணையில் முக்கிய தடயமாக கருதப்படுகிறது.
இதையடுத்து லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினர் கிணற்றுக்குள் இறங்கி, இரு உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயப் பணிக்காக அந்தப் பகுதிக்கு வந்தபோது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்களா, அல்லது முன்கூட்டியே தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்னர் சடலங்கள் கிணற்றில் வீசப்பட்டனவா என்பது உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிரிழந்த இருவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவ இடத்தில் கிடைத்த பொருட்கள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் உறுதியாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Shocking deaths bodily injuries What background sensational discovery bodies 2 young men dilapidated well