திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மக்களிடம் கொண்டு சென்று, அந்தக் கட்சியின் அரசியல் இமேஜை சேதப்படுத்துவதுதான் தமிழக வெற்றிக் கழக அரசின் முக்கிய வியூகங்களில் ஒன்றாக இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த யோசனையை முதலமைச்சர் விஜய்யிடம் அழுத்தமாக முன்வைத்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் பயணித்த மதிமுக தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், விஜய்க்கு வைகோ இப்படியொரு அரசியல் யோசனையை வழங்கியதாக வெளியாகியுள்ள தகவல் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. குறிப்பாக வைகோவின் மகன் துரை வைகோவின் அரசியல் வளர்ச்சிக்கு திமுக கூட்டணியும், அந்தக் கட்சியின் முக்கிய தலைவர்களும் துணையாக இருந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது திமுகவை எதிர்கொள்வதற்கான வியூகத்தை விஜய்யிடம் வைகோ பகிர்ந்ததாக சொல்லப்படுவது அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் பேசிய வைகோ, தமிழக வெற்றிக் கழகத்தை எந்த சக்தி அழிக்க நினைத்தாலும், அந்தக் கட்சியை பாதுகாக்கும் ஆயுதமாக மதிமுக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். அவரது இந்த பேச்சு ஏற்கனவே தமிழக அரசியலில் கவனம் பெற்ற நிலையில், அதற்கு முன்பாக நடந்த முக்கிய ஆலோசனை ஒன்றின் பின்னணி குறித்த தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன.
மாமல்லபுரத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், அவர்களில் இரண்டு முக்கிய தலைவர்களை மட்டும் விஜய் தனிப்பட்ட முறையில் தனது அறைக்கு அழைத்துச் சென்று சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த இரண்டு தலைவர்களில் ஒருவர் ப.சிதம்பரம் என்றும், மற்றொருவர் வைகோ என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவரிடமும் தனித்தனியாக விஜய் அரசியல் நிலவரம் மற்றும் திமுகவை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
ப.சிதம்பரத்துடன் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது, தமிழக அரசியல் நிலவரம் மற்றும் திமுக தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு எழுந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திமுக தலைமையின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது 2ஜி விவகாரம் மற்றும் கடந்த காலங்களில் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றதாக கூறப்படும் கறுப்புப் பணம் குறித்தும் பேச்சு நடந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் இருந்து வெளியேறிய கறுப்புப் பணத்தின் அளவு மிகப்பெரியதாக இருந்ததாக மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்ததாகவும், அதில் பெரும்பாலானவை திமுக தரப்பினருடன் தொடர்புடையவை என்ற தகவல்கள் இருந்ததாகவும் ப.சிதம்பரம் கூறியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மத்திய அரசில் நிதி அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டிய ப.சிதம்பரம், இவ்வளவு பெரிய தொகையை எப்படி வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அரசின் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் விஜய்யிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேபோல் வைகோவுடன் முதலமைச்சர் விஜய் தனியாக பேசியபோது, திமுகவின் அரசியல் கட்டமைப்பை நேரடியாக உடைக்க முயற்சிப்பது எளிதான காரியம் அல்ல என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
பல ஆண்டுகளாக வலுவான கட்சி கட்டமைப்பை கொண்ட திமுகவை அமைப்பு ரீதியாக அசைப்பது மிகவும் கடினம் என்றும், அதற்காக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதற்கு பதிலாக அந்தக் கட்சியின் மக்கள் மத்தியிலான இமேஜை சேதப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைகோ ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
திமுக தலைமை எப்போதுமே தனது அரசியல் இமேஜ் பாதிக்கப்படுவதை விரும்பாது என்றும், அதனால்தான் ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் மக்களிடம் கொண்டு செல்வது அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வைகோ தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
திமுகவை ஊழல் சக்தியாக மக்கள் மத்தியில் அடையாளப்படுத்துவதும், மக்கள் பணத்தை கொள்ளையடித்து கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் வெளிப்படுத்துவதும் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
திமுகவின் வலுவான கட்சி கட்டமைப்புடன் நேரடியாக மோதுவதை விட, மக்கள் மத்தியில் அந்தக் கட்சியை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தினால் போதும் என்றும், அதன்பிறகு மற்ற மாற்றங்கள் தானாகவே நடைபெறும் என்றும் வைகோ விஜய்யிடம் அழுத்தமாக கூறியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ப.சிதம்பரம் மற்றும் வைகோ ஆகிய இரு மூத்த தலைவர்களின் கருத்துகளையும் முதலமைச்சர் விஜய் தீவிரமாக எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததாக கூறப்படும் ஊழல்கள், முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான விவரங்களை சேகரிக்க அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி மூலமாக சில முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக தலைமையின் குடும்பத்தினர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான விவரங்களை ஆதாரங்களுடன் சேகரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
யார் யார் எந்தெந்த காலகட்டங்களில் சொத்துக்களை வாங்கியுள்ளனர், அவர்களது வருமானத்துக்கும் சொத்து மதிப்புக்கும் தொடர்பு இருக்கிறதா, பினாமி பெயர்களில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளனவா, வெளிநாடுகளில் நிறுவனங்கள் அல்லது சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளனவா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தகவல்களை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவரங்கள் அனைத்தையும் மிகவும் ரகசியமாக சேகரித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து திமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் தொடர்பான தகவல்களை லஞ்ச ஒழிப்புத் துறை ரகசியமாக சேகரிக்க தொடங்கியுள்ளதாக கோட்டை வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் நோக்கம் சட்ட ரீதியாக ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது மட்டுமல்ல என்றும், ஆதாரங்கள் கிடைத்தால் அவற்றை மக்கள் மத்தியில் வெளிப்படுத்தி திமுகவுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்குவதும் தவெக அரசின் திட்டமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
திமுகவின் கட்சி கட்டமைப்பை நேரடியாக உடைக்க முயற்சிப்பதை விட, ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் அதன் மக்கள் செல்வாக்கை குறைப்பதே எளிதான வழி என்ற வைகோவின் ஆலோசனையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டாரா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
ஒருகாலத்தில் திமுக கூட்டணியின் முக்கிய தலைவராக இருந்த வைகோவே தற்போது அந்தக் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கான வியூகத்தை விஜய்யிடம் வழங்கியதாக வெளியாகும் தகவல் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையிலேயே திமுக முன்னாள் அமைச்சர்களின் சொத்துக்கள் குறித்து ரகசிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதா, யார் யார் இந்த விசாரணை வளையத்துக்குள் வருவார்கள், ஆதாரங்கள் கிடைத்தால் தவெக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதுதான் தற்போது கோட்டை மற்றும் அறிவாலய வட்டாரங்களில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.