விமர்சிக்கும் தலைவர்களே... உங்க பிள்ளைகளை அரசுப் பள்ளியில படிக்க வச்சிருக்கீங்களா...? - அமைச்சர் கீர்த்தனா அதிரடி கேள்வி
Leaders who criticize Have you sent your children to government schools Minister Keerthana sharp question
சிவகாசி அருகேயுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட ஆய்வின் போது மாணவியுடன் நடந்த உரையாடல் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் கீர்த்தனா விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இந்தச் சூழலில், தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.அந்தப் பதிவில், "அரசு பள்ளி மாணவியை நான் கேலி செய்ததாக சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

ஆனால் உண்மை முற்றிலும் வேறுபட்டது" என தெரிவித்துள்ளார்.இதைத் தொடர்ந்து, "நானும் அரசு பள்ளியில் கல்வி கற்ற மாணவிதான். தமிழ் வழிக் கல்வியில்தான் வளர்ந்தேன். இன்று என் ஆங்கில உச்சரிப்பை வைத்து என்னை விமர்சிப்பவர்கள், உண்மையில் என்னை மட்டுமல்ல; அரசு பள்ளிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் தன்னம்பிக்கையையும் கேள்விக்குறியாக்குகின்றனர்" என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், "கணிதம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் தமிழில்தான் கற்றேன். பிரெஞ்சு போன்ற வெளிநாட்டு மொழிகளைப் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளிகளில் கல்வி கற்கும் வசதியோ எனக்கு கிடைக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.கார்ப்பரேட் துறையில் பணியாற்றத் தொடங்கிய காலத்தில் ஆங்கிலத்தில் பேசுவதில் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், பல தவறுகளைச் செய்தபோதும் தொடர்ந்து கற்றுக்கொண்டு முன்னேறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"இன்றும் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்தவித தயக்கமோ வெட்கமோ இல்லை. கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம்" என்றும் அமைச்சர் கீர்த்தனா பதிவிட்டுள்ளார்.மேலும், "இன்று என்னை ஆங்கிலத்திற்காக விமர்சிப்பவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் அரசு பள்ளி மாணவர்களையும் தமிழ் வழியில் கல்வி கற்கும் மாணவியரையும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதற்கு யார் உத்தரவாதம் அளிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு பள்ளியில் கல்வி கற்கும் ஒவ்வொரு மாணவரும் உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் நிற்க வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும், தமிழ் வழியில் படித்த மாணவியொருவர் எந்த மேடையிலும் தலையெழுத்தாக பேசக்கூடிய சூழலை உருவாக்குவதே தனது பணியின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
"என் செயல்பாடுகளை விமர்சிக்கலாம். என் பணியை கேள்வி கேட்கலாம். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை சிதைக்கும் வகையில் கேலி செய்வதைத் தவிர்க்க வேண்டும்" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி தாம் பதிவு செய்ததல்ல என்றும், அது ஊடகங்கள் செய்தி சேகரிப்பின் போது பதிவு செய்யப்பட்ட காட்சிதான் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
"அந்தக் காட்சியை பதிவு செய்யுமாறு நான் யாரிடமும் கூறவில்லை. ஊடகங்கள் தங்களது செய்திப் பணியின் ஒரு பகுதியாக அதை பதிவு செய்துள்ளனர். உண்மையை அறிய விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட ஊடகங்களிடமே விளக்கம் பெறலாம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, "இன்று என்னை விமர்சிக்கும் அரசியல் தலைவர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும், தங்களது சொந்த குழந்தைகளில் எத்தனை பேரை அரசு பள்ளிகளில், தமிழ் வழிக் கல்வியில் படிக்க வைத்துள்ளனர்?" என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.
"அரசு பள்ளிகளை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்து இன்று இந்த உயர்ந்த பொறுப்பில் நிற்கும் ஒரு பெண்ணை விமர்சிப்பது எளிது. ஆனால், அரசு பள்ளியில் கல்வி கற்ற நான் இன்று இந்த இடத்தில் நிற்பதே அதற்கான மிகச் சிறந்த பதிலாகும்" என்று அமைச்சர் கீர்த்தனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Leaders who criticize Have you sent your children to government schools Minister Keerthana sharp question