நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துக.. தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!!
vijayakanth statement on may 17
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பஞ்சு விலை கடந்த ஓராண்டில் மட்டும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதால் ஜவுளி உற்பத்தி தொழில் அழிவை நோக்கி செல்கிறது. மேலும் இறக்குமதி செய்யும் பருத்தியை பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நூல் விலை கடுமையாக ஏற்றப்பட்டுவிட்டதால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதையே நம்பியுள்ள லட்சக்கணக்கான விசைத்தறி நெசவாளர்களின் ஜீவாதாரம் அந்தரத்தில் ஊசலாடத் தொடங்கியிருக்கிறது.
எனவே பருத்தி பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு பருத்தி உற்பத்தியை அதிகப்படுத்தி நிரந்திர விலையை நிர்ணயம் செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியாவில் தடை விதித்துள்ளதை போல் பருத்தி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்தால், உள்நாட்டில் பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் எப்படி முக்கியமோ, அதுபோல ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு விவசாயமும், நெசவுத் தொழிலும் மிக முக்கியம்.
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்கள் அதிகளவில் ஜவுளி தொழிலை சார்ந்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் தலையிட்டு, நூல் உற்பத்தியாளர்கள், விசைத்தறி சங்கங்கள், அரசு தரப்பு அதிகாரிகள் என முத்தரப்பு குழு அமைத்து நூல் விலையைக் கட்டுப்படுத்தி ஜவுளி உற்பத்தி மற்றும் நெசவாளர்களின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
vijayakanth statement on may 17