இந்தியாவிற்கு 50% வரியை டிரம்ப் போடவில்லை! வரி போடச் சொன்னதே மோடிதான்!ஆ.ராசா சர்ச்சை பேச்சு!
Trump did not impose 50 tax on India Modi was the one who asked for tax ARaza controversial speech
திருப்பூரில் அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்புக்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமெரிக்கா விதித்த கடுமையான வரி உயர்வால் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி, மத்திய அரசை கண்டித்து திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். அவர்கள், அமெரிக்காவின் வரிவிதிப்பு இந்திய தொழில்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதாகவும், இதனை சமாளிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விமர்சித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திமுக எம்.பி. ஆ.ராசா, “மோடியும் அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50% வரி. அந்த வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா முன்கூட்டியே எச்சரித்தும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியா–பாகிஸ்தான் போரை நிறுத்தியது டிரம்ப் தான் என அவர் பலமுறை கூறியுள்ளார். அது உண்மையா பொய்யா என பிரதமர் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை” என்றும் ஆ.ராசா சாடினார்.
அதே நேரத்தில், அமெரிக்க அமைச்சர் பீட்டர் நவ்ரோ இந்தியா மீதான வரிவிதிப்பு குறித்து பேசியபோது, “உக்ரைனில் நடப்பது மோடி போர். இந்தியாவில் நடப்பது பிரமாணிய சுரண்டல்” எனக் குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூரின் பின்னலாடைத் தொழிலாளர்கள் மற்றும் தொழிலதிபர்களின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்த்துள்ளது.
English Summary
Trump did not impose 50 tax on India Modi was the one who asked for tax ARaza controversial speech