போலீசாரின் நிபந்தனைகளை ஏற்க மறுத்த த.வெ.க.!விஜய் சுற்றுப்பயணம் ரத்து?
TRP refuses to accept police conditions Vijay tour canceled
திருச்சி: தமிழக வெற்றிக்கழக (த.வெ.க) தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசார சுற்றுப்பயணத்தை வருகிற 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து தொடங்க உள்ளார். காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் விஜய், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை, மார்க்கெட் வழியாக சென்று, காந்தி மார்க்கெட் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே உரையாற்ற உள்ளார்.
இதற்கான அனுமதி பெற, கடந்த 6 ஆம் தேதி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், திருச்சி காவல் ஆணையர் காமினியை சந்தித்து மனு அளித்தார். ஆனால் போலீசார், “பொதுக்கூட்டத்துக்கு மட்டுமே அனுமதி, ரோடு ஷோக்கு அனுமதி இல்லை” என்று பதிலளித்தனர். அதன்பின், காந்தி மார்க்கெட் மரக்கடை பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தலாம் என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, த.வெ.க. நிர்வாகிகள் நேற்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சென்றனர். ஆனால் கமிஷனரை நேரடியாக சந்திக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் பரபரப்பு நிலவியது. பின்னர் வடக்கு காவல் துணை கமிஷனர் சிபினை சந்தித்த த.வெ.க.வினர், விஜய் பிரசாரத்துக்கான அனுமதி மனுவை மீண்டும் அளித்தனர். அதன் பேரில், திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என போலீசார் தெரிவித்தனர்.
மேலும், விஜய் பிரசார வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்ல கூடாது, உரையாற்றும் இடங்களைத் தவிர மற்ற இடங்களில் வாகனத்திலிருந்து இறங்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகளையும் போலீசார் விதித்துள்ளனர்.
இந்நிபந்தனைகளை ஏற்க முடியாது என த.வெ.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு மீண்டும் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
TRP refuses to accept police conditions Vijay tour canceled