திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை நடவடிக்கை..!
Transport operation to operate special buses for devotees for the consecration of Murugan Temple at Tiruchendur
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளது. இதற்கு பக்தர்கள் இலகுவாக செல்வதற்கான சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.
'தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு திருவிழா 07.07.2025 அன்று நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் வரும் 04.07.2025 முதல் 08.07.2025 வரையிலான நாட்களில், இவ்விழாவிற்கு, தமிழ்நாட்டில் பல ஊர்களிலிருந்து 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவில் பொதுமக்கள் பங்கேற்க வசதியாக வரும் 04.07.2025 மதியம் முதல் 08.07.2025 மதியம் வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து திருச்செந்தூருக்கு 400 சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்விழாவினை முன்னிட்டு, திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் குமாரபுரம், நாகர்கோவில் சாலையில் தெப்பக்குளம், தூத்துக்குடி சாலையில் ITI வளாகம் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தத்திலிருந்து, திருச்செந்தூர் கோவில் வாசல்வரை செல்வதற்கு வசதியாக 30 கட்டணமில்லா சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் பங்கேற்க வசதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி சென்னை, திருச்சி, கும்பகோணம்., காரைக்குடி, புதுக்கோட்டை, மதுரை., கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பேருந்துகளுடன், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 06.07.2025, 07.07.2025 மற்றும் 08.07.2025 ஆகிய நாட்களில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு https://www.tnstc.in/ மற்றும் TNSTC Mobile App மூலம் பயணச்சீட்டினை முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.' என்று அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Transport operation to operate special buses for devotees for the consecration of Murugan Temple at Tiruchendur