காதல் விவகாரத்தில் அடுத்தடுத்து சோகம்... விஷம் குடித்த குடும்பம்...! தாய் உயிரிழப்பு...! நடந்தது என்ன...?
Tragedy follows love affair Family poisoned Mother dies What happened
தேனி மாவட்டம் கம்பத்தில், மகனின் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகள் என 3 பேர் விஷம் குடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சிகிச்சை பலனின்றி மனைவி உயிரிழந்த நிலையில், கணவன் மற்றும் மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கம்பம் திருவள்ளுவர் காலனியைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் (47), கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி நாகலட்சுமி (40). இவர்களுக்கு பால்பாண்டி (22) என்ற மகனும், யோகலட்சுமி (18) என்ற மகளும் உள்ளனர். பால்பாண்டி பொக்லைன் இயக்குபவராக வேலை செய்து வந்தார்.
பாண்டீஸ்வரன் வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டில் தேனியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பால்பாண்டிக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர், இருவரையும் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம்பெண்ணின் உயிரிழப்புக்கு பால்பாண்டிதான் காரணம் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து அவர்கள் கம்பத்தில் உள்ள பாண்டீஸ்வரனின் வீட்டுக்குச் சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தால் பாண்டீஸ்வரன் குடும்பத்தினர் கடும் மனவேதனை அடைந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து பாண்டீஸ்வரன், நாகலட்சுமி மற்றும் யோகலட்சுமி ஆகிய 3 பேரும் அரளி விதையை அரைத்து குடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், நாகலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டீஸ்வரன் மற்றும் யோகலட்சுமிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கம்பம் தெற்கு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, குடும்பத்தினர் விபரீத முடிவை எடுத்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Tragedy follows love affair Family poisoned Mother dies What happened