அதிகாலையில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம் - கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு.!!
touristers croud increase in kanniyakumari
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவது வழக்கம்.
அந்த வகையில், ஞாயிறு விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு காலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். பின்னர் அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று உற்சாகத்துடன் கண்டு களித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில், ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்றவற்றில் அதிகாலை முதலே கூட்டம் அதிகமாக உள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக கடற்கரையில் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
touristers croud increase in kanniyakumari