'மத்திய அரசின் நோக்கம் இதுதான்'...! - மோடி அரசின் கல்வித்துறை திட்டங்களுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் தாக்கு...!
This intention central government Manickam Thakur attacks Modi government education sector plans
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியைப் பறித்து, கல்வி அமைப்பை முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நுழைவுத் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள், வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்ட பிரச்சினைகளைக் கூட தடுக்க இயலாத மத்திய கல்வித்துறை, தற்போது பல்கலைக்கழகங்களின் சுதந்திர செயல்பாட்டையே பாதிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரங்களை மாற்றியமைக்கும் நோக்கில் கொண்டு வரப்படவுள்ள "விக்சித் பாரத் கல்வி அதிகார அமைப்பு மசோதா–2025", நாட்டின் உயர்கல்வி அமைப்புக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் மாணவர்களின் எதிர்காலத்தை ஊழல் மற்றும் நிர்வாகக் குறைபாடுகள் மூலம் ஆபத்துக்குள்ளாக்கி, மறுபுறம் மாநிலங்களின் கல்வி உரிமைகளையும் பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகவும், மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழ்நிலைக்கு எதிராக இந்திய மாணவர்களின் கல்வி உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுத்து வரும் "சத்ரோன் கி கூஞ்ச்" இயக்கம் சமரசமற்ற மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளதாகவும், மாணவர் நலனுக்கு எதிரான மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் ஜனநாயக ரீதியில் தக்க பதிலளிப்பார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
English Summary
This intention central government Manickam Thakur attacks Modi government education sector plans