தேனியில் அரசு பெண் செவிலியர் வெட்டி படுகொலை.!
theni nurse murder
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்துள்ள பாப்பம்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி செல்வி (வயது 43). இவர் ஆண்டிபட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக செவியில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக கருத்துவேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில், செல்வி ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரம் பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று இரவு சுரேஷ் தனது மனைவி செல்விக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டாரிடம் தெரிவித்து, உடனடியாக சென்று செல்வியை பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.
உறவினர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டி இருந்தது. இதனையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, செல்வி வீட்டின் பூஜை அறையில் முகம் மற்றும் தலையில் பலத்த வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.