தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
The Indian Communist Party is fighting in support of Dalit and tribal students
தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சட்டமன்றம் எதிரில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநிலத் துணைச் செயலாளர்
சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா, கலைநாதன், மாநில பொருளாளர் சுப்பையா, நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் ராமமூர்த்தி, அபிஷேகம், கீதநாதன், தலித் கூட்டமைப்பின் தலைவர் ஜெயபாலன், பழங்குடி கூட்டமைப்பின் தலைவர் ஏகாம்பரம், அனைத்திந்திய தலித் உரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நலவேந்தன் உட்பட பெரும் திரளாக கலந்து கொண்டனர்
போராட்டத்தினை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி முதலமைச்சர், மற்றும் ஆதிதிராவிட நலத்துறை செயலரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
அப்போது அந்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2020-21 ஆம் ஆண்டு முதல் தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி திட்டத்தை (Go.MS No.8/ ADW/ 2020-21, dt.4.1.2021) என்ற அரசாணை மூலம் புதுச்சேரி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளிடமிருந்து மாணவர்களின் தகவல்கள் பெறப்பட்டு அவர்களுக்கான கல்வி கட்டணம் கல்வியாண்டின் துவக்கத்திலேயே அரசினால் செலுத்தப்பட வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையில் உள்ள நிர்வாக குளறுபடிகளால், இக்கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு கல்வி ஆண்டின் இறுதியில் அனுப்பும் நிலை ஏற்படுகிறது.
ஏற்கனவே பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தாங்கள் நிர்ணயித்த கல்வி கட்டணத்தை புதுச்சேரி அரசும், ஆதிதிராவிடர் நலத்துறையும் முழுமையாக கொடுப்பதில்லை எனத் தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும் இலவச கல்வி திட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில், தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களிடம் கூடுதல் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டி கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் தங்களுக்கு அரசு செலுத்தும் கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை செலுத்துகிறார்கள்.
இது சம்பந்தமாக மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக அமைப்புகள் நலத்துறையில் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ஆகியோருக்கு (No.515 /ADW&STW/ PA/ 2021-22/693 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு (No.515/ ADW& STW/ PA/ 2021-22/ 694 Dt.4.10.21) கடிதம் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை இயக்குனர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆகியோரை கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. ( Endt.No.3774/ DSE/ CEO/ Ac/ A2/ 2021/ 264 dt.18.10.2021) இலவச கல்வி திட்டத்தின் செயல்பாடுகளை உறுதிப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் கல்வி நிறுவனங்கள் மீது மீண்டும் புகார் வந்ததை அடுத்து 25.1.2022 தேதியிட்ட No.547/ ADW/STW/ PA/ 2021-2022 சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் அரசின் எந்த நடவடிக்கைக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து அரசு உத்தரவை மீறி செயல்படுகிறார்கள். அரசு உத்தரவுகளை மதிக்காமல், மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள் மீது ஏன் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
இத்திட்டத்திற்காக கடந்த 2024-25 கல்வி ஆண்டிற்கு மட்டும் சுமார் ரூபாய். 60 கோடிக்கு மேல் சிறப்பு கூறு நிதி (SCP) திட்டத்தின் மூலம் செலவு செய்கிறோம் என்று கூறும் புதுச்சேரி அரசு ஏன் திட்டம் முழுமையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்தவில்லை. இதனால் இலவச கல்வி திட்டம் என்ற திட்டமே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் புதுச்சேரி அரசு செயல்படுகிறது.
எனவே புதுச்சேரி அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அடங்கிய முத்தரப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்து தலித் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை முழுமையாக அரசு செலுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் .அரசின் முடிவை அமுல்படுத்தாத கல்வி நிறுவனங்கள் மீது 1989 மற்றும் 2016 SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் . இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
English Summary
The Indian Communist Party is fighting in support of Dalit and tribal students