அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாததால் வழக்குகள் பாதிப்பு; கோவை மாவட்ட ஆட்சியருக்கு ரூ.62,000 அபராதம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
The court has imposed a fine of Rs 62000 on the Coimbatore District Collector for failing to appear before the government lawyers
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள 05-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகாத காரணத்தினால் 08 வழக்குகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு (மாநில அரசுக்கு )மொத்தம் 62,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவக்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றி வந்த அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர், புதிய அரசு வழக்கறிஞர்களாக 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், அதற்கான முறையான அரசாணை மற்றும் பணி நியமன உத்தரவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அவர்களால் பொறுப்பேற்கவோ, நீதிமன்றங்களில் ஆஜராகவோ முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் நீதிமன்றங்களில் தினசரி வழக்கு விசாரணைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக 05-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அத்துடன், சாட்சி சொல்வதற்காகக் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவர் ஒருவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
ஆனால், அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாவில்லை. இதனால், சாட்சியிடம் விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அரசு தரப்பின் இந்தத் தவறால் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் இதை சுட்டிக்காட்டிய நீதிபதி சிவக்குமார், சாட்சியாக வந்த மருத்துவரின் பயணச் செலவு மற்றும் இழப்பீடாக 10,000 ரூபாயை ஒரு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கோவை பந்தயசாலை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காகக் குற்றம்சாட்டப்பட்ட 05 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இவர்களுடன் சாட்சி சொல்வதற்காகத் திருவாரூரில் இருந்து காவல் துறை உதவி ஆய்வாளர் (SI) ஒருவரும் வந்திருந்தார். இங்கும் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணை தடைபட்டது.
இதன்காரணமாக நீதிமன்றத்திற்குத் தேவையின்றி வரவழைக்கப்பட்டதால் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும், சாட்சிக்கும் வீண் சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி, இதற்காக 9,000 ரூபாய் அபராதம் விதித்தார். இந்தத் தொகையில் குற்றம்சாட்டப்பட்ட 05 பேருக்கு தலா 1,000 ரூபாயும், உதவி ஆய்வாளருக்கு 4,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கும் வகையில், மொத்தம் 62,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சிவக்குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The court has imposed a fine of Rs 62000 on the Coimbatore District Collector for failing to appear before the government lawyers