சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு உச்ச நீதிமன்றம் முன் ஜாமீன்..!
Supreme Court grants anticipatory bail to Poovai Jagan Moorthy
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட விவகார வழக்கில் முன்ஜாமீன் கேட்டு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், இந்த மனுவை கடந்த வாரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இத்யனை தொடர்ந்து, பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் வக்கீல் ராம்சங்கர் உச்ச நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட சக நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மனுதாரர் ஜெகன்மூர்த்தி இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மனுதாரர் எம்.எல்.ஏ. என்பதால் குறைதீர் கோரிக்கைகளுடன் அணுகுவது வாடிக்கை என்றும், அவ்வாறு காணாமல் போன சிறுவனின் தாயார் மனுதாரரை அணுகிய போது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆலோசனை அளித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை பரிசீலிக்காமல் உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தவறிழைத்துள்ளது என்றும், வழக்கு விசாரணைக்கு மனுதாரர் தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்து வரும் சூழலில் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது தவறானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், மனுதாரர் கைது செய்யப்பட்டால் தொகுதி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் கைது செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை தடுக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வக்கீல் ராம்சங்கர் குறிப்பிட்டு இருந்தார்.
குறித்த மனுவை நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Supreme Court grants anticipatory bail to Poovai Jagan Moorthy