மர்ம காய்ச்சலுக்கு மாணவி பலி..! சுகாதார துறையை வறுத்தெடுக்கும் மக்கள்..!
student death for fever
ஆவடி அருகே பாலவேடு ஊராட்சியில் மர்ம காய்ச்சலின் காரணமாக 10ம் வகுப்பு மாணவி பலியானார்.
ஆவடி பாலவேடு ஆஞ்சநேயர் கோயில் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மகள் பிரியா (15). திருநின்றவூரில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தாள். சில தினங்களுக்கு முன்பு பிரியா காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு காய்ச்சல் குணமாகாததை அடுத்து சென்னை ஷெனாய் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முந்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியழுதனர். இதற்கிடையே சிறுமி மரணத்திற்கு அப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் “பாலவேடு ஊராட்சியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் பல இடங்களில் தேங்கி நிற்கிறது மேலும் குப்பைகள், டயர்கள், தேங்காய் ஓடுகள், மட்டைகள் சரிவர அகற்றப்படவில்லை என்றும் இதனால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி அப்பகுதி மக்களை கடிப்பதால் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பாலவேடு ஊராட்சியில் உள்ள மக்களுக்கு டெங்கு, சிக்கன் குனியா, மர்ம காய்ச்சல் குறித்து ஊராட்சி நிர்வாகமோ அல்லது சுகாதார துறையோ எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இதன் காரணமாக மக்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.