'தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதமா..? பாடகர் சங்கீத்சன்னை உடனே விடுதலை செய்ய வேண்டும்'; இலங்கை அரசுக்கு சீமான் கோரிக்கை..!
Seeman demands that the Sri Lankan government immediately release Seeman demands that the Sri Lankan government immediately release singer Sangeeth Sannai
''மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
''ஈழத் தாயகம் பற்றியும், வீரம் செறிந்த அதன் விடுதலைப் போராட்ட வரலாறு பற்றியும், தாயக விடுதலைக்கு தங்கள் இன்னுயிர் ஈந்த மாவீரர்கள் பற்றியும், தமிழர் பண்பாட்டு பெருமைகள் குறித்தும் தன் பாடலின் மூலம் வெளிப்படுத்திய ஹிப்ஹாப் சங்கீத்சன்னை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இலங்கை இனவாத அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
பயங்கரவாத்தை முற்று முழுதாக அழித்து முடித்துவிட்டோம் என்று கொக்கரித்த இலங்கை அரசு, ஆயுதப் போராட்டம் மவுனித்து இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒரு தனிமனிதனின் பாடலைக் கண்டு பயப்படுவது ஏன்? கோயிலில் பாட்டு பாடுவதெல்லாம் கொடிய பயங்கரவாதம் என்றால் இலங்கை அரசின் கீழ் தமிழர்கள் நிம்மதியாக வாழ்வதெப்படி?
மறைந்த தங்கள் முன்னோர்களின் வீரத்தை போற்றுவதும், ஈகத்தை நினைவுகூர்வதும் பயங்கரவாதமா? கம்யூனிச அரசாங்கம் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அனுரா குமரா தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனா அரசிற்கு இதைத்தான் மார்க்சும், ஏங்கல்சும் கற்பித்தார்களா? இதுதான் சேகுவேராவும், பிடல் காஸ்ட்ரோவும், லெனினும், ஹோசிமின்னும் தங்களுக்கு காட்டிய வழியா?
தமிழர்கள் தங்கள் விடுதலை போராட்ட முன்னோர்களை நினைவுகூர்வது பயங்கரவாதம் என்றால், கடந்த காலங்களில் முந்தைய இலங்கை அரசுகளால் விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட தங்கள் கட்சியின் முன்னவர்களை ஜெவிபி நினைவுகூர்வது பயங்கரவாதமா? இல்லையா? இடதுசாரி தத்துவத்தை ஏற்றுள்ளதாக கூறிக்கொள்ளும் ஜெவிபி அரசு கடைப்பிடிக்கும் இன நல்லிணக்கம் இதுதானா? ஏற்படுத்தியுள்ள இன ஒற்றுமை இதுதானா?
இடதுசாரி போர்வையில் காலங்காலமாக இனவாதத்தையே கடைப்பிடித்து வரும் ஜெவிபி கட்சியின் முகமூடியை சங்கீத்சன்னின் கைது கிழித்தெறிந்துள்ளது. மாவீரர் நாளில் நினைவுகூர அனுமதி என்பது போன்று ஜெவிபி அரசு நடத்தியது அத்தனையும் நாடகம் என்பதையும், இலங்கையில் எந்த அரசு அமைந்தாலும், அது சிங்கள இனவாத கொள்கையிலிருந்து அணு அளவும் மாறாது என்பதையும் இக்கைது மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்துகிறது.
அன்று தமிழர்களின் ஆயுதமேந்திய விடுதலை போராட்டம்தான் அமைதிக்கு தடை என்று அழித்தொழித்த உலக நாடுகள் இப்போது என்ன பதில் கூறப்போகிறார்கள்? தமிழ் மக்களின் இந்த இழிநிலைதான் உலக நாடுகள் விரும்பிய அமைதியா? பாடல் பாடினால்கூட பயங்கரவாதச் சட்டம் என்றால் சிங்களர்களுடன் தமிழர்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும்?
இலங்கையின் இனவாத கோர முகத்தை ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும் இப்போதாவாது உணர்ந்து, தமிழ் மக்களின் விடுதலைக்கு துணைநிற்க வேண்டும். இலங்கை நாடாளுமன்றத்தில் சங்கீத்சன்னின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தங்கள் முன்னோர்களை போற்றக்கூடாது என்பதைவிடவும் இனவாதக் கொடுமை வேறில்லை. பாடல்கள் உள்ளிட்ட கலைகளை பயங்கரவாதம் என்றுகூறி அனுமதி மறுப்பதை விடவும் கொடிய அடிமைநிலை வேறு இல்லை. ஆகவே, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்பி சங்கீத்சன்னை இலங்கை இனவாத அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman demands that the Sri Lankan government immediately release Seeman demands that the Sri Lankan government immediately release singer Sangeeth Sannai