தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அதிரடி...ஈரோடு கிழக்கு தொகுதியில் 14 திமுக பணிமனைகளுக்கு சீல்..!!
Sealing 14 DMK workshops in Erode East Constituency
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று தனது பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களை ஆடு மாடு போல திமுகவினர் அடைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை முதல் தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைக்கும் நடவடிக்கைகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் முறையாக அனுமதி பெறாமல் விதிகளை மீறி அமைக்கப்பட்ட தேர்தல் பணிமனைகளை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். முதற்கட்டமாக 14 திமுக பணிமனைகளுக்கும், 2 அதிமுக பணிமனைகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் திமுகவினர் தடுப்பதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கல்லு கடை ராஜாஜி வீதியில் இயங்கி வந்த திமுக தேர்தல் பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஆலமர தெருவில் செயல்பட்டு வந்த திமுக பணிமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதே போன்று விதிகளை மீறி செயல்பட்டு வரும் பல பணிமனைகளுக்கு சீல் வைக்க உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்காளர்களை தொந்தரவு செய்யும் வகையில் செயல்படும் அரசியல் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
English Summary
Sealing 14 DMK workshops in Erode East Constituency