ரஷ்ய தமிழறிஞர் துபியான்சுகி மறைவு.. மருத்துவர் இராமதாஸ் இரங்கல்.!
Russian Tamil scholar Tupianzuki Death Dr Ramadoss PMK Regret
புகழ்பெற்ற தமிழறிஞரும், மாஸ்கோ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய பேராசிரியருமான அலெக்சாண்டர் துபியான்சுகி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழ் மீது பற்று கொண்ட அலெக்சாண்டர் துபியான்சுகி 40 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுக்கு வந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சஞ்சீவி, பொற்கோ ஆகியோரிடம் தமிழ் கற்றவர். தமிழ் இலக்கியங்களின் மீது கொண்ட காதலால் திருமுருகாற்றுப்படை, மதுரை காஞ்சி ஆகிய நூல்களை மொழிபெயர்த்தவர். அகநானூறு, புறநானூறு, நற்றினை, குறுந்தொகை மற்றும் பாரதியார் படைப்புகள், பாரதிதாசன் படைப்புகளில் பல ரஷ்ய மொழியில் மொழிமாற்று செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர். சிலப்பதிகாரம், அழகின் சிரிப்பு உள்ளிட்ட காவியங்களை அவற்றின் சுவையும், தரமும் குறையாமல் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்று துடிப்பு கொண்டிருந்தவர்.
தமிழ் மொழியின் சிறப்புகளை அனுபவித்தவர். தனித்தமிழில் பேச வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தவர். சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றிய துபியான்சுகி, தமக்கு முன் உரையாற்றிய அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஆகியோர் பிற மொழி கலந்த தமிழில் பேசியதை சுட்டிக் காட்டி, அவர்கள் தனித்தமிழில் பேச முயல வேண்டும் என்று அவர்களிடம் நேரடியாகவே கூறியதிலிருந்தே தனித்தமிழ் மீது அவர் கொண்டிருந்த பற்றை அறிய முடியும்.
அலெக்சாண்டர் துபியான்சுகி அவர்களின் சிறப்பை தமிழகம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக என்னால் நிறுவப்பட்ட தமிழ் ஓசை நாளிதழின் வார இணைப்பான களஞ்சியத்தில், அயலகத் தமிழறிஞர்கள் என்ற தலைப்பிலான தொடரின் 14&ஆவது அத்தியாயத்தில் துபியான்சுகி பற்றி விரிவாக எழுத வைத்தேன். துபியான்சுகி அவர்களின் மறைவுக்கு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Russian Tamil scholar Tupianzuki Death Dr Ramadoss PMK Regret