இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி கஞ்சா பறிமுதல்!
Rs. 2 crore worth of cannabis attempted to be smuggled to Sri Lanka seized
ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பார்சல்களின் மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ராமேசுவரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சி நடப்பதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமேசுவரம் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையில் போலீசார், துறைமுகம் அருகே உள்ள கடற்கரை பகுதியில் தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்றிருந்த கார் ஒன்றில் இருந்து சிலர் பார்சல்களை படகில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் 25 பார்சல்களில் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த சகாயராஜ், ராமச்சந்திரன் , குலோத்தமன், சந்தோஷ் , சச்சின், அர்த்தினாஸ்ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.போலீசார் கைப்பற்றி இருக்கும் இந்த கஞ்சா பார்சல்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
விசாரணையில், இந்த கஞ்சா பார்சல்கள் ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி கொண்டு வரப்பட்டதாகவும்,பின்னர் ராமேசுவரத்துக்கு கொண்டு வந்து கஞ்சா பார்சல்களை படகில் ஏற்ற முயன்றபோது அந்த கும்பல் பிடிபட்டுள்ளது தெரியவந்துள்ளது .
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டபோது இந்த கும்பலுடன், இலங்கையை சேர்ந்த கடத்தல் ஏஜென்ட் ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் அவர் இந்த கஞ்சா பார்சல்களை நடுக்கடலில் வந்து பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததன் பேரில், 6 பேரும் இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
English Summary
Rs. 2 crore worth of cannabis attempted to be smuggled to Sri Lanka seized