மீனவர்கள் கைது எதிரொலி - ராமேசுவரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!!
rameshwaram fishermans announce untill strike for tn fishermans arrest
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. மேலும், மீனவர்களின் விசை படகுகளையும் பறிமுதல் செய்து அதனை அரசுடைமையாக்கி விடுகின்றனர்.
இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகளால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று எல்லை கடந்து வந்து மீன் பிடித்தனர் என்று கூறி, ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.

இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராமேசுவரம் மீன் பிடித்துறைமுகத்தில் ராமேசுவரம் அனைத்து மீனவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த நிகழ்வை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் மீனவர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும், ஆகஸ்டு 13-ம் தேதி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ராமேசுவரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளவும், ஆகஸ்டு 19-ம் தேதி மாலை 3 மணி அளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
English Summary
rameshwaram fishermans announce untill strike for tn fishermans arrest