1.68 கோடி ரூபாய் செலவில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்: அடிப்படை வசதிகள் கூட இல்லை : ஆவடி பொதுமக்கள் குற்றச்சாட்டு..!
Public alleges that the new sub registrars office in Avadi lacks even basic facilities
ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆவடியில் சார் பதிவாளர் அலுவலகத்தில், ஆவடி மாநகராட்சியை சுற்றியுள்ள திருநின்றவூர் நகராட்சி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பூந்தமல்லி நகராட்சியை சேர்ந்த 33 வருவாய் கிராமங்களின் பத்திரப்பதிவு நடந்து வருகின்றன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கு இணங்க, தனியார் கட்டிடத்தில் இருந்து சார் பதிவாளர் அலுவலகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டு, ஆவடி அருகே பருத்திப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் பின்புறமுள்ள அரசு நிலத்தில் 1.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 02 அடுக்கு கொண்ட கட்டிடம் 1625 சதுர அடியில் இந்த அலுவலகம் கட்டப்பட்டது.

குறித்த புதிய சார் பதிவாளர் அலுவலம் திறப்பு விழா நடத்தப்பட்டத்தை அடுத்து பட்டாபிராம் மாடர்ன் சிட்டி பகுதியில் தனியார் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் அங்கு பத்திரப்பதிவு தொடங்கியது. ஆனால், பத்திரப்பதிவு தொடங்கிய முதல் நாளே ஆடிப்பூரம் என்பதால் ஏராளமான பொதுமக்கள் பத்திரப்பதிவு செய்ய வந்திருந்தனர்.
பெரும்பாலும் ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோறும் 100 பத்திரப்பதிவுகள் சராசரியாக நடைபெறுகின்றன. முகூர்த்த நாட்களில் 200 பத்திரப்பதிவுகள் வரை நடக்கும். ஆனால், இவ்வளவு பத்திரப்பதிவு நடைபெறும் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை, இருக்கை, வாகன நிறுத்தம் போன்ற அடிப்படை வசதி இல்லை என மக்கள் கூறியுள்ளனர்.
அத்துடன்,வெயில், மழை காலங்களில் நிற்பதற்குகூட இடமே இல்லாமல் அவதிப்படும் சூழல் உள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆகையால் அங்கு உடனடியாக அடிப்படை வசதிகள், வாகன நிறுத்தம் போன்றவற்றை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
Public alleges that the new sub registrars office in Avadi lacks even basic facilities